திமுகவுடன் நெருக்கம்; விமர்சிக்க தயக்கம் தவெக பற்ற வைப்பால் கொதிக்கும் அதிமுக!

2

- நமது நிருபர் -




'அ.தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர்கள், தி.மு.க., அமைச்சர்களை ஏன் விமர்சனம் செய்வதில்லை' என த.வெ.க., எழுப்பிய கேள்வி, அ.தி.மு.க.,வுக்குள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

'தி.மு.க., தான் தங்களின் எதிரி' என சொல்லி வந்த அ.தி.மு.க.,வும், த.வெ.க.,வும் தற்போது ஒருவருக்கு ஒருவர் கடுமையாக மோதி வருகின்றனர். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், விஜயை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, த.வெ.க., துணை பொதுச்செயலர் நிர்மல்குமார், ''தி.மு.க., வெற்றிக்கு உதவும் விதமாக, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் செயல்படுகின்றனர். குறிப்பாக, அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து அவர்கள் பேசுவதே இல்லை,'' என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அ.தி.மு.க.,வினரே, 'த.வெ.க.,வினர் சொல்வது நியாயம் தான்' என, சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

குறுநில மன்னர்




அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: நிர்மல் குமார் அ.தி.மு.க.,வில் இருந்தவர் என்பதால், இங்கிருப்போர் குறித்து நன்றாகவே அவருக்கு தெரிந்துள்ளது. தி.மு.க., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அவரவர் பகுதிகளில் குறுநில மன்னர் போல் செயல்படுகின்றனர். அவர்களை முதலில் வீழ்த்தினால் தான், வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை வெல்ல முடியும். அதற்கு, அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை, அவர்கள் செய்யும் அட்டகாசங்களை, பொது மேடைகளில் அ.தி.மு.க.,வினர் பேச வேண்டும்; அவர்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்த வேண்டும்.



தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தபோது, அ.தி.மு.க., அமைச்சர்களை அப்படித்தான் வீழ்த்தினர். ஆனால், எதிர்க்கட்சியான பின், இதுபோல் அ.தி.மு.க., செயல்படவில்லை. மதுரையில் அமைச்சர் மூர்த்திக்கு எதிராக, செல்லுார் ராஜு, உதயகுமார், ராஜன் செல்லப்பா உள்ளிட்ட யாருமே பேசுவதில்லை. அ.தி.மு.க., கோட்டையான கோவையில்கூட, தி.மு.க.,வை வெற்றி பெற வைக்க, செந்தில் பாலாஜி வேலை செய்கிறார். அவருக்கு எதிராக அ.தி.மு.க.,வினர் யாரும் பேசாதது மர்மமாக இருக்கிறது.


திண்டுக்கலில், அமைச்சர்கள் பெரியசாமி, சக்கரபாணிக்கு எதிராக, விசுவநாதனும், சீனிவாசனும் இதுவரை பேசியதே இல்லை. தலைநகரில் சேகர்பாபு, சுப்பிரமணியன், அன்பரசனுக்கு எதிராக, உள்ளூர் அ.தி.மு.க.,வினர் என்றாவது போராடி இருக்கின்றனரா என்றால் இல்லை. திருச்சியில் நேரு, மகேஷ் பெயரைக்கூட, அந்த மாவட்ட அ.தி.மு.க., சீனியர் நிர்வாகிகள் உச்சரித்தது இல்லை. எல்லா மாவட்டங்களிலும் லோக்கல் தி.மு.க., புள்ளிகளுடன், ஏதாவது ஒரு வகையில் அ.தி.மு.க.,வினர் சமாதானமாகி விட்டனர்.


அவர்களோடு உறவில் இருந்து, சொந்த கட்சிக்கே துரோகம் செய்கின்றனர். ஜெயலலிதா இருந்தால், இப்படியெல்லாம் நடக்காது. செல்வாக்குடன் வலம் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., விமர்சனம் செய்யாததால் தான், தி.மு.க., அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், உள்ளூர்களில் செல்வாக்காக வலம் வருகின்றனர். தி.மு.க., ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி இருந்தாலும், உள்ளூர்களில் தி.மு.க.,வினர் மீதான செல்வாக்கு, அதை சரிகட்டி விடுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement