தி.மு.க.,வை எதிர்க்கும் ஷோடங்கருக்கு காங்கிரசில் திடீர் முக்கியத்துவம்

1

சென்னை: தி.மு.க., எதிர்த்தும், காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கருக்கு, அக்கட்சி தலைமை முக்கியத்துவம் அளித்து வருகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக, கோவா மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிரிஷ் ஷோடங்கர், கடந்த 2025 பிப்., 15ல் நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் உரையாடி, தமிழக காங்கிரசின் நிலையை தெளிவாக உணர்ந்துள்ளார்.

அதன் அடிப்படையில், மேலிடத்திற்கு அவர் அளித்துள்ள தகவலில், 'கடந்த 2004 முதல் 22 ஆண்டுகளாக தி.மு.க., கூட்டணியில் இருக்கிறோம். சில எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் தவிர, கூட்டணியால் காங்கிரசுக்கு எந்தப் பலனும் இல்லை.



'உள்ளாட்சி அமைப்புகளில், காங்கிரசுக்கு மிகக் குறைவான இடங்களே ஒதுக்கப்படுகின்றன. கூட்டணியால் வெற்றி பெறுகிறோம் என்பதால், வெற்றி பெற்ற காங்கிரஸ் பிரதிநிதிகள், கட்சி வளர்ச்சியில் அக்கறை காட்டுவதில்லை.


'இதனால், கட்சியின் ஓட்டு வங்கி சரிந்து வருகிறது. இதிலிருந்து கட்சியை மீட்டெடுக்க, தி.மு.க.,விடம் அதிக தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும். உள்ளாட்சி தேர்தலில், காங்கிரசுக்கு எத்தனை சதவீதம் என்பதை இப்போதே உறுதி செய்ய வேண்டும்' என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது வரை தமிழகத்திற்கு பொறுப்பாளர்களாக அனுப்பப்பட்டவர்கள், கட்சி வளர்ச்சியில் அக்கறை காட்டாமல், கூட்டணியை தக்க வைத்தால் போதும் என்ற அளவிலேயே செயல்பட்டனர். ஆனால், கிரிஷ் ஷோடங்கர் அதிலிருந்து மாறுபட்டு, 'அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு' என்பதை விடாப்பிடியாக வலியுறுத்தி வருகிறார்.



இது தி.மு.க.,வுக்கும், காங்கிரசில் ஒரு தரப்புக்கும் கோபத்தை ஏற்படுத்தினாலும், காங்கிரஸ் தொண்டர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் காரணமாக, தி.மு .க., எதிர்த்தபோதும், காங்கிரஸ் தலைமை, ஷோடங்கருக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

Advertisement