டில்லி 'உஷ்ஷ்ஷ்...!' பா.ஜ.,வுக்கு பிரச்னையை கிளப்பும் புத்தகம்!

3


எதிர்க்கட்சிகள் பார்லி.,யின் இரு சபைகளையும் தொடர்ந்து முடக்க காரணம், ஒரு புத்தகம். இந்த புத்தகத்தின் சில பகுதிகளை, சபையில் படிக்க முயற்சித்தார் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல். 'வெளியாகாத புத்தகத்திலிருந்து சில பகுதிகளை சபையில் படிக்கக் கூடாது' என, சபாநாயகர் அனுமதி தரவில்லை. இதனால், எதிர்க்கட்சிகளால் தொடர்ந்து சபை முடக்கப்பட்டு வருகிறது.


'கேரவன்' என்ற ஆங்கில இதழில், இந்த புத்தகத்தின் சில பகுதிகள் வெளியாகி உள்ளன. அதைத் தான் ராகுல் படிக்க முயற்சித்தார். என்ன புத்தகம் அது? 'போர் ஸ்டார்ஸ் ஆப் டெஸ்டினி' என்ற இந்த ஆங்கில புத்தகத்தை எழுதியவர், முன்னாள் ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே. 2019 - 22 வரை ராணுவ தளபதியாக இருந்தவர். 2020ல் இந்தியா - சீனா எல்லைப் பிரச்னையின் போது தளபதியாக பணியாற்றியவர். அந்த சமயத்தில் மத்திய அரசு எப்படி செயல்பட்டது என்பது குறித்து விளக்கமாக எழுதியுள்ளார் நரவனே.


'முப்படை தளபதியாக இவர் நியமிக்கப்படலாம் என சொல்லப்பட்டது; ஆனால், அது நடக்கவில்லை. ஒருவேளை தனக்கு அந்த பதவி கிடைக்காத வெறுப்பில், ராகுலிடம் இந்த புத்தகத்தை கொடுத்து விட்டாரா நரவனே' என்று கூட, டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.



சமீபத்தில் நரவனேவிடம், 'இந்த புத்தகம் ஏன் இன்னும் வெளியாகவில்லை?' என்று கேட்டதற்கு, 'ராணுவ அமைச்சகம் இந்த புத்தகத்திற்கு அனுமதி கொடுத்தால் தான் வெளியாகும். நான், புத்தகத்தில் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு, புத்தக வெளியீட்டுக்கு பதிப்பாளருக்கு கொடுத்து விட்டேன். அவர் தான் அனுமதி பெற வேண்டும். என் வேலை முடிந்து விட்டது' என்றார். இந்த புத்தகம் பிரச்னையைக் கிளப்பியுள்ள நிலையில், ராணுவ அமைச்சகம் அனுமதி தருமா என்பது சந்தேகமே.

Advertisement