வங்கதேச 'மாஜி' அமைச்சர் சிறை காவலில் மரணம்

டாக்கா: வங்கதேசத்தின் சிறுபான்மை ஹிந்து சமூகத்தின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரமேஷ் சந்திர சென், 86, சிறைக் காவலில் இருந்த போது உயிரிழந்தது அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.


நம் அண்டை நாடான வங்கதேசத்தில், 2024ல் நடந்த மாணவர் போராட்டங்களை அடுத்து, அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா தன் பதவியை ராஜினாமா செய்ததுடன், இந்தியாவில் தஞ்சமடைந்தார்.


இதையடுத்து, நோபல் பரிசு வென்ற முகம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது. கடந்த 2024ல் ஹசீனா பதவி விலகிய பின், அவரது அமைச்சரவையில் நீர்வளத்துறை அமைச்சராக இருந்த ரமேஷ் சந்திர சென், கைது செய்யப்பட்டார். கொலை குற்றச்சாட்டு உட்பட பல வழக்குகள் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தன.


கடந்த 18 மாதங்களாக தினாஜ்பூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு, நேற்று காலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.


உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.


வயது மூப்பின் காரணமாக, ரமேஷ் சந்திர சென்னுக்கு பல உடல்நல பிரச்னைகள் இருந்தபோதிலும், சிறையில் முறையான மருத்துவ சிகிச்சை வழங்கவில்லை என்றும், வயதையும், உடல் நலனையும் கருத்தில் கொண்டு ஜாமின் கோரியும் அது நிராகரிக்கப்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.


மேலும், ஜாமின் கிடைப்பதற்கான சூழல் வரும்போது, அவர் மீது புதிய வழக்குகள் போடப்பட்டதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

Advertisement