காஞ்சி கோவில் மண்டபம் இடிக்கும் நடவடிக்கை மனசாட்சிக்கு புறம்பானது: சென்னை ஐகோர்ட் கடும் அதிருப்தி

12


சென்னை: 'காஞ்சிபுரத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் பழமையான மண்டபம், வாஸ்துபடி அமையவில்லை என கூறி, இடிக்கும் நடவடிக்கை முற்றிலும் மனசாட்சிக்கு புறம்பானது' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளையார்பாளையம் கிருஷ்ணன் தெருவில், சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளால், தங்கள் வீட்டினுள் நுழைய முடியவில்லை என கூறி, அதே பகுதியைச் சேர்ந்த வசந்தா மற்றும் சண்முகவேல் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.மனுவில், 'கோவிலின் சுற்றுச்சுவரை எங்கள் இடத்திற்கு அருகில் கட்ட, அறநிலையத் துறைக்கு தடை விதிக்க வேண்டும்' என கோரியிருந்தனர்.


இந்த மனு, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது.


அப்போது, அறநிலையத் துறை தரப்பில், 'மனுதாரர் சாலையை ஆக்கிரமித்து உள்ளார். கோவிலில் உள்ள மண்டபம் முறையாக இல்லை. வாஸ்துபடி அமையவில்லை என்பதால், கோவிலை இடித்துவிட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' என தெரிவிக்கப்பட்டது.


இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இடிக்கப்படுவதற்கு முன் இருந்த கோவில் புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை பார்க்கும்போது, அங்கு உள்ள மண்டபம் புராதனமானதாகவும், முறையாக இருப்பதாகவும் தெரிகிறது. திடீரென்று பழமையான அந்த மண்டபம் வாஸ்து சாஸ்திரப்படி இல்லை என்றும், ஒழுங்கற்றதாக இருப்பதாகவும் கூறி, இடிக்கும் நடவடிக்கை மனசாட்சிக்கு புறம்பானது. அதை இடித்து விட்டு, தற்போது அதேபோல கட்டுவதற்கு எவரும் கிடைக்க மாட்டார்கள்.


எனவே, கோவில் சீரமைப்பு தொடர்பான அறிக்கை மற்றும் கோவில் எப்போது கட்டப்பட்டது என்பது குறித்த அறிக்கையை, அறநிலையத் துறை தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை, கோவிலில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளக் கூடாது. வழக்கு விசாரணை, வரும் 13ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement