வெள்ளி வென்றார் மனு பாகர்: ஆசிய துப்பாக்கி சுடுதலில்

புதுடில்லி: ஆசிய துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை மனு பாகர் (25 மீ., 'பிஸ்டல்') வெள்ளி வென்றார்.

டில்லியில், ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் ('ரைபிள்' / 'பிஸ்டல்') தொடர் நடக்கிறது. பெண்களுக்கான 25 மீ., 'பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஈஷா சிங் (589.24 புள்ளி), மனு பாகர் (584.18) முதலிரண்டு இடம் பிடித்தனர். மற்றொரு இந்திய வீராங்கனை ரிதம் சங்வான் (578.22) 7வது இடம் பிடித்தார்.

25 மீ., 'பிஸ்டல்' அணிகள் பிரிவில் மனு பாகர், ஈஷா சிங், ரிதம் சங்வான் அடங்கிய இந்திய அணி 1751.64 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றது.

அடுத்து நடந்த 25 மீ., 'பிஸ்டல்' தனிநபர் பைனலில், ஈஷா சிங் 30 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். ரிதம் சங்வான் (27 புள்ளி) 4வது இடத்தை கைப்பற்றினார். தலா 35 புள்ளிகளுடன் மனு பாகர், வியட்நாமின் நுகுயென் துய் டிராங் முதலிடத்தை பகிர்ந்து கொண்டிருந்தனர். பின், 'ஷூட்-ஆப்' முறையில் ஏமாற்றிய மனு பகார் (4), 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார். வியட்நாம் வீராங்கனை டிராங் (5) முதலிடம் பிடித்து தங்கத்தை தட்டிச் சென்றார்.
ஜூனியர் பெண்களுக்கான 25 மீ., 'பிஸ்டல்' அணிகள் பிரிவில் நாம்யா கபூர், அஞ்சலி பகவத், பாரிஷா குப்தா அடங்கிய இந்திய அணி (1723.39) தஙகம் வென்றது. தனிநபர் பைனலில் அஞ்சலி பகவத் (24) வெண்கலம் வென்றார். நாம்யா கபூர், இந்தோனேஷியாவின் அஸ்யிபா ரிஹாததுல் தலா 29 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டிருந்தனர். பின், 'ஷூட் ஆப்' முறையில் அசத்திய நாம்யா (3) முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இந்தோனேஷிய வீராங்கனை அசிபா (0) வெள்ளி வென்றார்.

Advertisement