கடந்தாண்டு 2.80 லட்சம் டன் தேயிலை ஏற்றுமதியில் சாதனை

கொல்கட்டா : இதுவரை இல்லாத அளவாக, கடந்தாண்டில் 2.80 லட்சம் டன் தேயிலையை ஏற்றுமதி செய்து, நம் நாடு சாதனை படைத்துள்ளதாக இந்திய தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வாரியம் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2025 ஜன., முதல் டிச., வரை 2.80 லட்சம் டன் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டதில், 8,488 கோடி ரூபாய் ஈட்டப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டில் 2.56 லட்சம் டன் தேயிலை ஏற்றுமதியாகி, 7,164 கோடி ரூபாய் கிடைத்தது. கடந்தாண்டு அதிகபட்சமாக தேயிலை ஏற்றுமதியில் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா மற்றும் அமெரிக்காவுக்கு குறைந்துள்ளது. கடந்தாண்டு அமெரிக்கா அதிக வரி விதித்ததால் வழக்கமான நாடுகளை விட புதிய நாடுகள் தேயிலை ஏற்றுமதி செய்வதற்கு கண்டறியப்பட்டன.

ஈரான், ஈராக் மற்றும் துருக்கி நாடுகளில் நிலவும் அரசியல் சூழலையும் தாண்டி ஏற்றுமதி சாத்தியமாகிஉள்ளது. குறிப்பாக, முந்தைய ஆண்டில் சீனாவுக்கு 6,240 டன்னாக இருந்த தேயிலை ஏற்றுமதி, கடந்தாண்டு 16,130 டன்னாக அதிகரித்துள்ளது.

அசாம் தேயிலையை உலக நாடுகள் விரும்புகின்றன. தற்போது அமெரிக்கா உடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம், தேயிலைக்கு அதிக விலை கிடைக்கக்கூடிய சந்தையை திறந்துள்ளது. இதேபோல், ஆப்கானிஸ்தான், எகிப்து, வடக்கு ஆப்ரிக்கா நாடுகளான அல்ஜீரியா, மொராக்கோ, டுனிஷியா ஆகிய நாடுகளுக்கு ம் இந்திய தேயிலை ஏற்றுமதியாகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளது.

Advertisement