குடிபோதையில் காரை ஓட்டி விபத்து புகையிலை அதிபரின் மகன் மீது வழக்கு

கான்பூர்: உத்தர பிரதேசத்தில், 10 கோடி ரூபாய் மதிப்பிலான, 'லம்போர்கினி' சொகுசு காரை, குடிபோதையில் அதிவேகமாக ஓட்டி பாதசாரிகள் மற்றும் வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய புகையிலை அதிபரின் மகன் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

உ.பி., கான்பூரின் வி.ஐ.பி., சாலையில் உள்ள வணிக வளாகம் அருகே நேற்று முன்தினம் மாலை 3:15 மணிக்கு அதிவேகமாக வந்த லம்போர்கினி சொகுசு கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்ற பாதசாரிகள் மற்றும் அங்கு நிறுத்தப்பட்ட வாகனங்கள் மீது அதிவேகமாக மோதியது.

இந்த விபத்தில், ஆறு பேர் படுகாயம் அடைந்தனர்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதிவாசிகள், விபத்தை ஏற்படுத்திய காரை முற்றுகையிட்டனர். அப்போது காரை ஓட்டி வந்த நபர் தப்ப முயன்றார்.

இதனால் ஆத்திரம்அடைந்த மக்கள், காரை அடித்து நொறுக்கினர். அதற்குள் மற்றொரு வாகனத்தில் வந்த பாதுகாவலர்கள், காரை ஓட்டி வந்த இளைஞரை மீட்டனர்.

தகவலறிந்து வந்த போலீசார், விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதற்கிடையே, விபத்தை ஏற்படுத்திய இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் டில்லியைச் சேர்ந்த பிரபல புகையிலை அதிபர் கே.கே.மிஸ்ராவின் மகன் ஷிவம் மிஸ்ரா என்பது தெரியவந்தது.

அதிவேகமாக காரை ஓட்டி வந்ததுடன் விபத்தை ஏற்படுத்தியபோது, குடிபோதையில் இருந்ததாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.

இதையடுத்து, ஷிவம் மிஸ்ராவின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஷிவம் மிஸ்ராவை தடுத்து நிறுத்த முயன்ற சிலரையும் அவரது பாதுகாவலர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, ஷிவம் மிஸ்ரா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ததுடன், அவரது சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

@block_B@

வரி ஏய்ப்பில் சிக்கியவர்

கடந்த, 2024ல் புகையிலை மற்றும் பான் மசாலா பொருட்கள் விற்பனையில் முக்கிய நிறுவனமாக திகழும், 'பன்ஷிதர்' நிறுவனம், தன் உண்மையான ஆண்டு வருவாயை 25 கோடி ரூபாய் என அறிவித்தது. ஆனால், அந்நிறுவனத்தின் உண்மையான வருவாய், 150 கோடி ரூபாய் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டது. இதையடுத்து, அந்நிறுவனத்தின் உரிமையாளரும், டில்லியைச் சேர்ந்த தொழிலதிபருமான கே.கே.மிஸ்ராவின் மகன் ஷிவம் மிஸ்ராவின் வீடு மற்றும் அலுவலகங்கள் மட்டுமின்றி மஹாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 20 இடங்களில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், 11.50 கோடி ரூபாய் ரொக்கம், நகைகள், விலை உயர்ந்த வாட்சுகள், பிற சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றுடன், அவர் பயன்படுத்தி வந்த மூன்று வெளிநாட்டு சொகுசு கார்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதில், தற்போது விபத்தை ஏற்படுத்திய லம்போர்கினி காரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.block_B

Advertisement