உடுமலை - திருப்பூருக்கு பஸ் வசதி குறைவு; நெரிசலில் பயணிக்கும் மக்கள்
உடுமலை: உடுமலை - திருப்பூர் வழித்தடத்தில் குறைந்தளவு பஸ்களே இயக்கப்படும் நிலையில், இரவு நேரங்களில் திடீரென பஸ் சேவை நிறுத்தப்படுவதால், பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
உடுமலையிலிருந்து மாவட்ட தலைநகராக உள்ள திருப்பூருக்கு, அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகள், பனியன் நிறுவனங்களுக்கு என தினமும் பல ஆயிரக்கணக்கானவர்கள் சென்று வருகின்றனர்.
அதோடு, இந்த வழித்தடத்தில், 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ள நிலையில், போதிய டவுன் பஸ்கள் இல்லாத நிலையில், திருப்பூருக்கு செல்லும் பஸ்களையே கிராம மக்களும், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தொழிலாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
உடுமலை - திருப்பூர் வழித்தடத்தில், குறைந்த அளவு அரசு பஸ்களே இயக்கப்படுவதால், பஸ்களில் நெரிசல் நிரந்தரமாக உள்ளது. அதிலும், காலை, மாலை நேரங்களில், ஒரு பஸ்சில், நுாற்றுக்கும் மேற்பட்டோர் பயணிக்கும் அவல நிலையும் காணப்படுகிறது.
காலை நேரங்களில், பணிக்குச்செல்வோருக்கு போதிய பஸ்கள் இல்லாததால், பல மணி நேரம் காத்திருக்கும் அவல நிலையும், கிடைக்கும் பஸ்களில், நெரிசலில் பயணிக்கும் நிலையும் உள்ளது.
இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி வரும் நிலையில், காலை, மாலை நேரங்களில் வழக்கமாக இயக்கப்படும் குறைந்தளவு பஸ்களும் இயக்கப்படாமல், திடீரென நிறுத்தப்படுகிறது.
அதோடு, வார விடுமுறை நாட்களில் வெளியூர் செல்வோர் வசதிக்காக, சிறப்பு பஸ்களை, திருப்பூரிலுள்ள மூன்று பஸ் ஸ்டாண்ட்களில் இருந்து போக்குவரத்து கழகம் இயக்குகிறது. இந்த பஸ்கள் இயங்கும் பகுதி குறித்த அறிவிப்புடன் பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்படுகிறது.
அப்பகுதிக்கு அப்போதைக்கு பயணிகள் இல்லை என்றாலும், பஸ் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்படுகிறது; வேறு பகுதிக்கு செல்ல காத்திருக்கும் பயணிகளுக்கு மாற்றி அந்த பஸ்களை இயக்குவதில்லை.
இரவு நேரங்களில், பனியன் நிறுவனங்கள் மற்றும் ரயில்களிலிருந்து இறங்கி வருவோர், திருப்பூரிலிருந்து உடுமலைக்கு வர பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கும் நிலையில், வழக்கமாக இயக்கப்படும் பஸ்கள் திடீரென நிறுத்தப்படுகிறது.
இதனால், இரவு நேரத்தில் பல மணி நேரம் காத்திருந்து, அங்குள்ள போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினால், நுாற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் சேர்ந்த பிறகு, ஒரு பஸ் ஏற்பாடு செய்யப்படுகிறது.
எனவே, உடுமலை - திருப்பூர் வழித்தடத்தில், கூடுதல் பஸ்களை இயக்கவும், காலை மற்றும் மாலை நேரங்களில், ஒவ்வொரு, 5 நிமிடத்தில் ஒரு பஸ் இயக்கவும், பஸ் இயக்கம் குறித்து, உடுமலை, திருப்பூர் பகுதியில், நேர அட்டவணை குறித்த அறிவிப்பு பலகை வைக்கவும், குறிப்பிட்ட நேரத்தில் பஸ்களை இயக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
பா.ஜ., ஆர்ப்பாட்டம்
-
காலை உணவை புறக்கணித்த தஞ்சை துாய்மை பணியாளர்கள்
-
அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா
-
அமைச்சர்கள் தொகுதிகளில் ஜாதி பாகுபாடு அதிகம்: சொல்கிறார் கிருஷ்ணசாமி
-
ஆக்கிரமிப்பால் சுருங்கிய ரோடு, மின்கம்பத்தால் இடையூறு தேனி பென்னிகுவிக் நகரில் பொதுமக்கள் தவிப்பு
-
ஏ.ஐ., தொழில்நுட்ப பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்