தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு: மாவட்ட தலைவர்களுக்கு செல்வப்பெருந்தகை நெருக்கடி

26

தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என, டில்லி கூட்டத்தில் வலியுறுத்துமாறு, தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கு அக்கட்சி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை அறிவுறுத்திய தகவல் வெளியாகி உள்ளது.


மாநில வாரியாக காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. அக்கூட்டத்தில், தமிழக காங்கிரசை சேர்ந்த மாவட்டத் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். அவர்களை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் ஆதரவாளரும், அமைப்பு செயலருமான ராம்மோகன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.


'நீங்கள் அனைவரும் ஒருமித்த குரலில், தி.மு.க., கூட்டணியில் நீடிக்க வேண்டும் என கூற வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார். ஆனால், அக்கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட தலைவர்கள், 'தி.மு.க., கூட்டணியில் நீடிக்க வேண்டுமானால், ஆட்சியில் பங்கு தர வேண்டும்; ஆறு அமைச்சர் பதவிகளை பெற வேண்டும்; 41 தொகுதிகளுக்கு குறையக்கூடாது' என பேசியுள்ளனர்.



'இந்தக் கோரிக்கையை தி.மு.க., ஏற்க முன்வரவில்லை என்றால், த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்கலாம்' என்றும் கூறியிருக்கின்றனர். இந்த தகவல் தெரியவந்ததும், செல்வப்பெருந்தகையும் அவரது ஆதரவாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



- நமது சிறப்பு நிருபர் -

Advertisement