15,700 குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார் முதல்வர் ரேகா

புதுடில்லி : டில்லியில் பா.ஜ., அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைய உள்ளது. இதையொட்டி, கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள், 15,700 பேருக்கு நேற்று முதல்வர் ரேகா குப்தா கல்வி உதவித்தொகை வழங்கினார்.

தலைநகர் டில்லியில், முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான பா.ஜ., அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி, 20ம் தேதி பதவியேற்றது. இந்த அரசு பதவியேற்றதன் ஓராண்டு, வரும், 20ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

இதையொட்டி, ரேகா குப்தா அரசு பல்வேறு நலத்திட்டங்களையும், வளர்ச்சிப் பணிகளையும் துவக்கி வருகிறது.

இந்நிலையில், டில்லி தையாக் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த கட்டுமான தொழிலாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ரேகா குப்தா, கட்டுமான தொழிலாளர்களின், 15,700 குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார். அப்போது, அவர் பேசியதாவது:

கட்டுமான தொழிலாளர்களது குழந்தைகளின் கல்வி கனவை நிறைவேற்ற, ரூ.12 கோடி ஒதுக்கப்பட உள்ளது.

வேலைக்கு செல்லும் பெண்களின் குழந்தைகளை பாதுகாக்க, 'பால்னா' என்ற, குழந்தைகள் காப்பகம், 5 ரூபாய்க்கு உணவு வழங்கும் அடல் கேன்டீன், தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க, மத்திய அரசின் நான்கு தொழிலாளர் சட்ட விதிகளை மாநில அரசு கடைப்பிடிப்பது என, பல நல்ல திட்டங்களை, எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி உள்ளது.

டில்லி கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த வாரியத்தில் உள்ள, 5,400 கோடி ரூபாய் நிதியும், தொழிலாளர்களின் நலனுக்காக மட்டுமே செலவிடப்படும்.

இவ்வாறு ரேகா குப்தா பேசினார்.

டில்லி தொழிலாளர் நலத்தறை அமைச்சர் கபில் மிஸ்ரா பேசுகையில், ''கட்டுமான தொழிலாளர்கள் விபத்துக்களை சந்திக்க நேரிட்டால், அவர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டமும் அரசால் செயல்படுத்தப்படுகிறது,'' என்றார்.

Advertisement