ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சு; கடந்த கால தாக்குதலை நினைவூட்டிய அதிபர் டிரம்ப்!

3


வாஷிங்டன்: ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சந்தித்து பேசினார். இருநாட்டு தலைவர்களும் ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து முக்கிய பேச்சு நடத்தினர். இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் அவரது பிரதிநிதிகளை சந்தித்து பேசினேன்.



இது ஒரு மிகச் சிறந்த சந்திப்பாக இருந்தது. எங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான மிகப்பெரிய உறவு தொடர்கிறது. ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் ஒரு ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியுமா? இல்லையா என்பது குறித்து ஆலோசித்தோம். ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்று என விருப்பத்தை பிரதமரிடம் தெரிவித்தேன். அது முடியாவிட்டால், விளைவு என்னவாக இருக்கும் என்பதை நாம் பார்க்க வேண்டும். கடந்த முறை ஈரான் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ளாமல் தவிர்த்தது.

ஈரானில் மிட்நைட் ஹேமர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தினோம். அது அவர்களுக்கு இன்னும் பாடம் கற்றுக்கொடுக்கவில்லை. இந்த முறை அவர்கள் மிகவும் நியாயமானவர்களாகவும் பொறுப்புள்ளவர்களாகவும் இருப்பார்கள் என்று நம்புகிறோம். காசாவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய முன்னேற்றம் குறித்து நாங்கள் விவாதித்தோம். மத்திய கிழக்கில் உண்மையிலேயே அமைதி நிலவுகிறது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

எரிசக்தி துறையில்….



இது குறித்து வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் அதிபர் டிரம்ப் கூறியதாவது: உலகின் முதன்மையான எரிசக்தி உற்பத்தியாளராக அமெரிக்கா மாறி உள்ளது. கடந்த சில மாதங்களில், நமது நிலக்கரி ஏற்றுமதியை அதிகரிக்க ஜப்பான், கொரியா, இந்தியா மற்றும் பிற நாடுகளுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்துள்ளோம். நமது நிலக்கரியின் தரம் உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு சிறந்ததாக இருக்க வேண்டும், என்றார்.

Advertisement