தேவைக்கு ஏற்ப தேவையான இடத்தில் கச்சா எண்ணெய் கொள்முதல்; மத்திய அரசு திட்டவட்டம்

10

புதுடில்லி: 'உள்நாட்டு நுகர்வோர் தேவையை பூர்த்தி செய்ய தேவையான இடங்களில் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும்'' என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.


இது குறித்து ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது: அமெரிக்காவுடனான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் ஆரம்ப கட்டத்தில் மட்டுமே உள்ளது. காலப்போக்கில் மேலும் இந்த ஒப்பந்தம் குறித்து தகவல் தெரியவரும். இது மிகவும் நல்ல ஒப்பந்தம். அதிபர் டிரம்ப் அறிவித்த இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை 500 பில்லியன் டாலர்களாக விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


இதில் எரிசக்தியும் அடங்கும். இந்தியா நல்ல தரத்தில் எண்ணெய் கிடைக்கும் நாடுகளிலிருந்து தொடர்ந்து இறக்குமதி செய்யும். உள்நாட்டு நுகர்வோர் தேவையை பூர்த்தி செய்ய கொள்முதல் செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.


இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரியை குறைத்து அறிவிப்பு வெளியிட்ட நாளில் இருந்து, இந்தியா ரஷ்யாவின் எண்ணெய் வாங்குவதை நிறுத்தவும், அதற்கு பதிலாக அமெரிக்காவிலிருந்து கணிசமாக பெரிய அளவில் வாங்கவும், வெனிசுலாவிலிருந்து வாங்கவும் ஒப்புக்கொண்டுள்ளதாக டிரம்ப் கூறி வருகிறார்.


இந்த சூழலில், தேவைக்கு ஏற்ப தேவையான இடத்தில் கச்சா எண்ணெயை தரத்தை அடிப்படையாக கொண்டு கொள்முதல் செய்வோம் என மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தி உள்ளது.

Advertisement