மோடிக்காக எங்களுக்கு ஓட்டு போட வேண்டாம் என கூறிவிடாதீர்கள் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேச்சு

திண்டுக்கல்: ''மோடிக்காக, எங்களுக்கு ஓட்டுப் போட வேண்டாம்'' என கூறிவிடாதீர்கள் என்று திண்டுக்கல்லில் கவுரவ விரிவுரையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேசினார்.

திண்டுக்கல்லில் போராட்ட இடத்திற்கு வந்த அவர் கூறியதாவது:

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.9 முதல் கவுரவ விரிவுரையாளர்கள் போராடுகின்றனர். ஆனால் 'செவிடன் காதில் ஊதிய சங்காக.. இன்றுவரை தி.மு.க., அரசு கண்டு கொள்ளவில்லை. ஒன்றரை அமாவாசை முடிந்து, பவுர்ணமி வருவதற்குள் ஆட்சி மாற்றம் நிச்சயம் வரும். இவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். இப்பிரச்னையை முன்பே எங்களிடம் கூறியிருந்தால், தி.மு.க.,வை துாங்க விட்டிருக்க மாட்டோம். நான்கு ஆண்டுகளுக்குப் பின் 'தற்போது உங்கள் கனவு என்ன' என, கேட்கின்றனர். 'தி.மு.க., ஆட்சி வீட்டுக்கு போக வேண்டும்' என ஆசிரியர்கள் கூறுகின்றனர். 'அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்' என அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் போராடுகின்றனர். ஜாக்டோ ஜியோவை வைத்து தனக்குத்தானே முதல்வர் பாராட்டு விழா நடத்தினார். எனது மகன், எனக்கு பாராட்டு கூறுவது போல் மக்களை ஏமாற்றுகின்றனர். தி.மு.க., ஆட்சி மீது நம்பிக்கை இல்லாமல் தான் போராடுகின்றனர்.

லோக்சபாவில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட் மீதான ஆர்ப்பாட்டம் தொடர்பான விஷயத்துக்கு ஆணிஅடித்தது போல் எதிர்க்கட்சிகளுக்கு பதில் அளித்துள்ளார். காங்., ஆட்சியில் செய்த தவறுகளை பா.ஜ., சரி செய்துள்ளது. 'காங்கிரஸ் மோசமான ஆட்சி' என அவர் கூறியதால் அனைவரும் வெளிநடப்பு செய்துவிட்டனர். தமிழகத்தில் தி.மு.க.வை தவிர யார் ஆட்சி அமைத்தாலும், அது, 'டில்லி ஆட்சி' என முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். அப்படி டில்லி ஆட்சியாக இருந்தாலும் இருந்துட்டு போகட்டும். ரயில்வே ஸ்டேஷன், 10 ரயில்கள் வேண்டும் என்றால் டில்லியில் தான் கேட்க வேண்டும். இவர்களிடமா கேட்க முடியும். மத்திய அரசிடம் தான் மாநில அரசு கேட்கும்.

தி.மு.க.விற்கு எதிராக உள்ள அனைவரையும் பா.ஜ., முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை கூட்டணிக்கு அழைக்கிறார். அதில் தவறு இல்லை. தமிழகம் முழுவதும் நடக்கும் போராட்டங்கள் தி.மு.க., பொருத்தமில்லாத ஆட்சி, எதையும் செய்ய லாயக்கற்ற ஆட்சிஎன்பதை காட்டுகிறது. அதற்கு கவுரவ விரிவுரையாளர்கள் சாட்சி என்றார். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கவுரவ விரிவுரையாளர்களிடம், 'சகோதரிகளே, 'மோடிக்காக எங்களுக்கு ஓட்டுப் போட வேண்டாம்' எனக் கூறி விடாதீர்கள் என பேசியதால் சுற்றியிருந்தவர்கள் சிரித்தனர்.

Advertisement