மேம்பால சுவர்களில் போஸ்டர் ஒட்டுவது அதிகரிப்பு; கவனத்தை திசை திருப்பி விபத்துக்கு வழிவகுக்கும் அபாயம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பகுதியில், மேம்பால சுவர்களில் போஸ்டர் ஒட்டுவது அதிகரித்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகளை திசை திருப்பி விபத்துக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

பொது இடங்களில் பேனர் மற்றும் போஸ்டர் ஒட்டுவதால் ஏராளமான விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இதை தடுக்கும் வகையில், அனுமதியின்றி பேனர் மற்றும் போஸ்டர் ஒட்ட அரசு தடை விதித்துள்ளது.

அதிகரிப்பு அப்படி போஸ்டர் ஒட்டும் போது, அனுமதி பெறுவதில் உள்ள சிக்கல்கள் ஒருபுறம் உள்ளது. மேற்கண்ட அனுமதி மற்றும் செலவுகளில் இருந்து தப்பிக்கும் விதமாக, கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள மேம்பால சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டும் கலாசாரம் அதிகரித்து வருகின்றன.

அரசியல், தனியார் நிறுவன விளம்பரங்கள் என, மெகா அளவிலான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம், துராபள்ளம், பெத்திக்குப்பம், சிப்காட் சந்திப்பு, புதுகும்மிடிப்பூண்டி, பன்பாக்கம், கவரைப்பேட்டை, தச்சூர் ஆகிய பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் மேம்பால சுவர்கள் மற்றும் மேம்பாலத்தின் கீழ் உள்ள சுரங்கப்பாதையில் போஸ்டர்கள் அதிகளவில் ஒட்டப்பட்டுள்ளன.

அதிருப்தி போஸ்டர் ஒட்டப்படுவதால், அனுமதி, காலக்கெடு, செலவு என, எந்த பிரச்னையும் இல்லாததால், மேம்பால சுவர்கள், விளம்பரம் செய்யும் பகுதியாக மாறி வருகிறது.

ஆனால், இம்மாதிரியான விளம்பரங்கள் விபத்துகளுக்கு வழிவகுக்கும் என, சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

மேம்பால சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை பார்த்தபடி, வாகன ஓட்டிகள் பயணிக்கும் போது, கவனக்குறைவாக விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

கும்மிடிப்பூண்டியில் அதிகரித்து வரும் போஸ்டர் ஒட்டும் கலாசாரத்தை உடனே முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

மேலும், மேம்பால சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்றி, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Advertisement