அடுத்த ஐந்தாண்டுகளும் கொள்ளையடிக்க திட்டம்; சீமான் குற்றச்சாட்டு

29

சென்னை: ''லட்சக்கணக்கான கோடிகளை, மாநில வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல், கவர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். அடுத்த ஐந்தாண்டுகளும் கொள்ளையடிக்க திட்டம் போட்டே இப்படி செய்கின்றனர்'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து சீமான் கூறியதாவது: தி.மு.க., அரசு, மகளிர் உரிமைத்தொகை என்ற பெயரில், திடீரென 5,000 ரூபாயை, வங்கி கணக்கில் வரவு வைத்துள்ளது. இது, தேர்தல் வருவதை கணக்கிட்டு, மக்களின் ஓட்டை பறிக்கும் சூழ்ச்சி. நீண்ட நாட்களாக திட்டமிட்டு, மிகவும் ரகசியம் காத்து, ஒரே நாளில், 1.31 கோடி பேரின் வங்கி கணக்குகளில் 5,000 ரூபாய் செலுத்துவதில், தி.மு.க., அரசு நேர்த்தியாக செயல்பட்டுள்ளது.



இத்தனை கவனத்தையும் பொறுப்பையும், சட்டம் - ஒழுங்கை காப்பதில் காட்டவில்லை. பல அரசு துறை ஊழியர்கள் பணி பாதுகாப்பு, வாழ்வாதார பாதுகாப்புக்கு போராடி வருகின்றனர். நிதிநிலையை காரணம் காட்டி, அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுக்கும் அரசு, ஒரே நாளில், 6,500 கோடி ரூபாயை வாரி இறைக்கலாமா? லட்சக்கணக்கான கோடிகளை, மாநில வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல், கவர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். அடுத்த ஐந்தாண்டுகளும் கொள்ளையடிக்க திட்டம் போட்டே இப்படி செய்கின்றனர். இவ்வாறு சீமான் கூறினார்.

Advertisement