ஏர் இந்தியா விமான விபத்து; இத்தாலி அறிக்கையை மறுத்தது விசாரணை ஆணையம்

புதுடில்லி: ஆமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து குறித்து இத்தாலி செய்தி ஊடகம் வெளியிட்ட அறிக்கைக்கு விமான விபத்து விசாரணை ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு ஜூன் மாதம் ஆமதாபாத்தில் இருந்து கிளம்பிய ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நொடிகளிலேயே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், ஒரு பயணியைத் தவிர 260 பேர் உயிரிழந்தனர். இந்த விமான விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஏர் இந்தியா விமான விபத்து குறித்து இத்தாலியைச் சேர்ந்த நாளிதழ் (Corriere della Sera) ஒன்று வெளியிட்ட அறிக்கையை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விமான விபத்து குறித்து அந்த நாளிதழ் வெளியிட்ட அறிக்கையில்,விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏதும் இல்லை என்று ஆய்வாளர்கள் முடிவு செய்து விட்டதாகவும், இறுதி அறிக்கையைத் தயாரித்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தது. மேலும், இன்ஜின்களுக்கான எரிபொருள் விநியோகம் வேண்டுமென்றே துண்டிக்கப்பட்டதே விபத்துக்கான காரணம் என்றும அந்த நாளிதழ் அறிக்கை வெளியிட்டிருந்தது.

இதற்கு விமான விபத்து விசாரணை ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆணையம் தரப்பில் கூறியிருப்பதாவது: இதுபோன்ற விபத்து தொடர்பான விசாரணைகள் தொழில்நுட்ப ரீதியாகவும், சான்றுகளின் அடிப்படையிலும் தான் நடத்தப்படும். இதன்மூலம், விபத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து பாதுகாப்பை மேம்படுத்துவதே தவிர, முன்கூட்டியே பழி சுமத்துவது அல்ல. சர்வதேச விதிமுறைகளின்படி, விசாரணை முடிந்த பிறகு இறுதி அறிக்கை வெளியிடப்படும்.

உறுதி செய்யப்படாத செய்திகள் பொதுமக்களிடையே தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், ஊடகங்கள் கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும், இவ்வாறு கூறியுள்ளது.

Advertisement