விஜய் பிரசாரத்தில் மீண்டும் அசம்பாவிதம் : சேலம் கூட்டத்தில் மயங்கி விழுந்து ஒருவர் பலி

42

சேலம்;சேலத்தில் நடிகர் விஜயின் பிரசாரக்கூட்டத்தில் சிக்கி ஒருவர் பலியானார்.

சேலம் சீலநாயக்கன்பட்டி கேவிபி கார்டன் உள் வளாகத்தில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு, தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது பல்வேறு நிபந்தனைகள், கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. கூட்டத்தில் மொத்தம் 5 ஆயிரத்துக்கும் குறைவானர்கள் தான் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த கூட்டத்தில் நாற்காலிகள் எதுவும் போடப்படவில்லை. இதன் காரணமாக கடும் வெயிலில் கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் 3 மணி நேரத்துக்கும் மேலாக நின்று கொண்டு இருந்தனர். இந்த கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே மயங்கி விழுந்தார்.

அவரை உடனடியாக அங்குள்ளோர் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அந்த நபர் உயிரிழந்தார்.

அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில் உயிரிழந்தவர் பெயர் சுராஜ் (37) என்பதும், மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. இவர் சேலத்தில் உள்ள வெள்ளி பட்டறை ஒன்றில் தொழிலாளியாக பணியாற்றியவர் ஆவார்.

கூட்டத்தில் இருந்தவர்களில் சிலர் மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது. அது பற்றிய எந்த தகவலும் தெரியாத நிலையில் நடிகர் விஜய் தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பேசிக் கொண்டு இருந்துள்ளார். கடும் வெயிலே இந்த மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Advertisement