கவர்னர், நடிகை குஷ்புவை அவதூறாக பேசிய விவகாரம்; திமுக பிரமுகர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டு சிறை

64


சென்னை: கவர்னர் ரவி, நடிகை குஷ்பு ஆகியோரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக பிரமுகர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.


2023ம் ஆண்டு ஜூன் மாதம், கவர்னர் ரவி, பாஜ பிரமுகருமான குஷ்பு ஆகியோர் குறித்து, சர்ச்சைக்குரிய வகையில், திமுக பிரமுகரும், மேடை பேச்சாளருமான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசினார். கொடுங்கையூரில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய அவரின் பேச்சுகள் அடங்கிய வீடியோ வெளியாகி பெரும் விமர்சனத்துக்கு ஆளானது.


மகளிர் அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளிடம் இருந்து கடும் கண்டனங்களும் எழுந்தன. இதையடுத்து, புகாரின் அடிப்படையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். பின்னர் வழக்கில் அவருக்கு ஜாமின் கிடைக்க, மீண்டும் திமுகவில் சேர்க்கப்பட்டார்.

இந் நிலையில் சர்ச்சை பேச்சு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை எழும்பூர் கோர்ட் இன்று தீர்ப்பளித்தது. அதில், சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் 3 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. மேலும், ரூ.20 ஆயிரம் அபராதம் செலுத்துமாறும் உத்தரவிட்டது.

Advertisement