புதிய கட்டடத்தின் சுவர்களில் மேற்பூச்சு உதிர்வது ஏன்?

சமீப காலமாக மக்கள் வீடு வாங்கி குடியேறிய நிலையில், கட்டடத்தில் பல்வேறு குறைபாடுகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தில் சில ஆண்டுகளிலேயே அதன் சுவர்களில் மேற்பூச்சு உதிர்வது போன்ற பிரச்னைகள் பரவலாக காணப்படுகின்றன.

இத்தகைய பிரச்னைகள் வரும் நிலையில் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்தின் மீது தான் மக்களுக்கு சந்தேகம் எழுகிறது. பணத்தை அதிகமாக வாங்கிக்கொண்டு தரமற்ற முறையில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு உள்ளனர் என்று மக்கள் நினைக்கின்றனர்.

உண்மையில் கட்டடத்தின் சுவர்களில் மேற்பூச்சு சிதைவது, உதிர்வது போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடாது தான். இதில் எங்கு, எப்படி தவறு நடக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொண்டால், ஆரம்பத்திலேயே அதை தடுப்பதற்கான வழிகள் உள்ளன.

பொதுவாக கட்டடம் கட்டும் போது, கான்கிரீட் அடிப்படையிலான பணிகளில் ஒப்பந்ததாரரும், உரிமையாளர்களும் கவனமாக இருப்பர்கள். எனவே, இதற்கான கலவை தயாரிப்பு, அதில் சேர்க்கப்படும் பொருட்களின் அளவுகள் விஷயத்தில் கண்காணிப்பு அதிகமாக இருக்கும்.

ஆனால், பெரும்பாலான கட்டடங்களில் அவசரகதியில் பூச்சு வேலை மேற்கொள்ள நேரம் ஒதுக்குவதே முதல் தவறாக பார்க்கப்படுகிறது. அஸ்திவாரம் முதல், மேல் தளம் வரை அனைத்து பணிகளும் தரமான முறையில் நடந்துள்ளதால், பூச்சு வேலையில் எவ்வித குறைபாடும் ஏற்படாது என்று மக்கள் தானாக நினைத்து கொள்கின்றனர்.

பொதுவாக பூச்சு வேலை மேற்கொள்ளும் போது, சுவரை அதற்கு ஏற்ற நிலையில் தயார் படுத்த வேண்டும் என்பதை கவனத்தில் கொள்வது அவசியம். இதையடுத்து, பூச்சு வேலைக்கான கலவையில் ஒரு பங்கு சிமென்ட், நான்கு அல்லது ஐந்து பங்கு மணல் சேர்க்க வேண்டும்.

ஆற்று மணலை வாங்கி சலித்து, இந்த விகிதத்தில் பயன்படுத்தும் போது பூச்சு வேலையில் எவ்வித பிரச்னையும் ஏற்படாது. ஆனால், சில இடங்களில் பூச்சு வேலைக்கான கலவையில் மணல் அளவு அதிகமாக சேர்க்கப்படும் நிலையில் பூச்சுகள் சில ஆண்டுகளிலேயே உதிர்ந்து விடுகின்றன.

ஆற்று மணல் என்ற பெயரில் சுத்தப்படுத்தப்பட்ட கடற்கரை மணல் பயன்படுத்துவதும், மேற்பூச்சு உதிர்ந்து விட வாய்பாக அமைந்துவிடுகிறது. இதில் ஆற்று மணல் கிடைக்காத நிலையில் எம் சாண்ட் பயன்படுத்தப்படுவதிலும் கவன குறைவால் பிரச்னை ஏற்படுகிறது.

எனவே உங்கள் வீட்டுக்கான கட்டுமான பணியில் பூச்சு வேலை தொடர்பான விஷயங்கள் முறையாக நடக்கிறதா என்பதை துல்லியமாக கவனிக்க வேண்டும் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.

Advertisement