ராகுல் தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார்; மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு

23


புதுடில்லி: ராகுல் தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார். பொய்களைச் சொல்லி விவசாயிகளை தவறாக வழிநடத்த அவர் முயற்சி செய்து வருகிறார் என மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.


இது குறித்து சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது: ராகுல் தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார். பொய்களைச் சொல்லி விவசாயிகளை தவறாக வழிநடத்த அவர் முயற்சி செய்து வருகிறார். நாட்டு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். ஆனால், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தில், நாட்டின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு காலம் அவர்கள் விவசாயிகளை தவறாக வழிநடத்துவார்கள்? பிரதமர் மோடி விவசாயிகளுக்கும் நாட்டிற்கும் ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு நொடியும் சேவை செய்வதில் அர்ப்பணிப்புடன் உள்ளார். விவசாயிகளின் நலனுக்காக ஏராளமான திட்டங்களை கொண்டு வந்து அவர்களது வாழ்க்கையை மாற்றியுள்ளார். விவசாயிகளுக்காகவும், அவர்களின் நலன்களைப் பாதுகாக்கவும், வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கவும் தொடர்ந்து பாடுபடுவார். இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.



அதேபோல், மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது: இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் மோடி அரசு விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க முக்கியத்துவம் அளித்துள்ளது. அனைத்து விவசாயிகளின் நலன்களையும் பாதுகாத்துள்ளோம்.


இந்த வர்த்தக ஒப்பந்தம் விவசாயிகள், மீனவர்கள், இளைஞர்கள், சிறு, குறு நிறுவனங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். ராகுல் இன்று ஒரு நாடகக் கலைஞராகவும், போலியான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் ஜோடிக்கப்பட்ட கதைகளை இடைவிடாமல் கூறி வருவது அம்பலம் ஆகியுள்ளது. இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.

Advertisement