பால் உற்பத்தி பெருக சிறந்த வழி விவசாயிகளுக்கு அறிவுரை

''தீவன மேலாண்மையே, பால் உற்பத்தி பெருக்குவதற்கான சிறந்த வழி'' என்று கூறுகிறார், கால்நடை பல்கலை பயிற்சி மையத் தலைவர் மதிவாணன்.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கால்நடை வளர்ப்பும் பிரதானமாக இருந்து வருகிறது. இந்நிலையில், திருப்பூர், மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள, கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், கறவை மாடு வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் நடந்தது.

மையத் தலைவர் மதிவாணன் பேசியதாவது:

மாடு வளர்ப்பு குறித்து விவசாயிகள், கால்நடை வளர்ப்பாளர் விரிவாக தெரிந்து கொள்ள வேண்டும். பசுந்தீவனம், உலர் தீவனம், எரிசக்தி மிகுந்த தானியங்கள், கன்று ஈனுவதற்கு முன், கன்று ஈன்ற பின் அளிக்க வேண்டிய தீவனங்கள் குறித்து தெரிய வேண்டும்.

தீவன மேலாண்மையே, பால் உற்பத்தி பெருக்கத்துக்கான சிறந்த வழி; அறிவியல் முறையிலான வளர்ப்பு, சிக்கலான சூழலில் மாடு இறப்பை தடுக்கும்.

கறவை மாடு தேர்வு, சுத்தமான காற்றோட்டமான இடத்தில் கொட்டகை அமைப்பு, தினசரி பராமரிப்பு, இனப்பெருக்கம், நோய் தடுப்பு மற்றும் பால் உற்பத்தி தொழில்நுட்பங்களை விரிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். இவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

இன்று தடுப்பூசி முறைகள், நிறைய சிகிச்சைகள் வந்து விட்டன. அருகில் உள்ள கால்நடை மருத்துவர் உதவியை எப்போது வேண்டுமானாலும் நாடலாம்.

இவ்வாறு, மதிவாணன் பேசினார்.

பயிற்சியில் பங்கேற்க முடியாதவர்கள் கூடுதல் விபரங்களை, 0421 2248524 என்ற எண்ணில் அழைத்து தெரிந்து கொள்ளலாம்.




- நமது நிருபர் -:

Advertisement