தேர்தலுக்குப் பிறகும் வங்கதேசத்தில் ஓயாத வன்முறை; ஒருவர் பலி, 10 பேர் படுகாயம்

டாக்கா: வங்கதேசத்தில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், அங்கு வெடித்த வன்முறையால் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 10 பேர் பலத்த காயமடைந்தனர்.

வங்கதேசத்தின் 13வது பார்லிமென்டுக்கான தேர்தலில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கட்சி 300 இடங்களில் 209 இடங்களை வென்று மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் மூலம்,20 ஆண்டுகளுக்குப் பிறகு அக்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. ஜமாத்-இ-இஸ்லாமி 68 இடங்களை மட்டுமே வென்றது.

இந்தத் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, முன்ஷிகஞ்ச் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது, இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதேபோல, ஜெனைதா, கிஷோர்கஞ்ச், மேஹர்பூர், பதுவாகாளி மற்றும் தினாஜ்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் வன்முறை வெடித்தது. இதில், 80க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

இந்த நிலையில், வங்கதேசத்தின் முன்ஷிகஞ்ச் நகரில் நேற்று வெடித்த வன்முறையில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். வங்கதேசத்தில் தேசியக் கட்சி அமோக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மறுநாளே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இந்த வன்முறையைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவருக்கு நீதி கேட்டு டாக்கா பல்கலை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது முன்ஷிகஞ்ச் நகரில் போலீசார் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Advertisement