வங்கதேச தேர்தலில் அப்பட்டமான விதிமீறல்; ஷேக் ஹசீனா மீண்டும் புகார்

டாக்கா: வங்கதேச தேர்தலில் அப்பட்டமான விதிமீறல் நடந்துள்ளது என வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில், மாணவர்களின் போராட்டத்துக்கு பின் நடந்த முதல் பொதுத்தேர்தலில், மறைந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் பி.என்.பி., எனப்படும் வங்கதேச தேசியவாத கட்சி, மொத்தமுள்ள 299 தொகுதிகளில் 216 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சி, 20 ஆண்டுகளுக்கு பின், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளது. கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான், 60, பிரதமராக விரைவில் பதவியேற்க உள்ளார். தேர்தலில் அப்பட்டமான விதிமீறல் நடந்துள்ளது என வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம் சாட்டி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: வங்கதேசத்தில் நடந்தது தேர்தல் அல்ல; கேலிக்கூத்து. தேர்தலில் அப்பட்டமான விதிமீறல் நடந்துள்ளது. தேர்தலை ரத்து செய்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும். ஓட்டுச்சாவடியில் வாக்காளர்கள் யாரும் இல்லை. ஆனால் எண்ணும் போது மட்டும் அதிக ஓட்டுக்கள் இருந்தன.
தேர்தல் நாளிலேயே, மோதல்கள், குண்டு வெடிப்புகள், வாக்குச் சீட்டுப் பறிப்பு, குறிப்பிட்ட சின்னங்களுக்கு வாக்களிக்க வற்புறுத்தல் போன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் பதிவாகியுள்ளன.

அவாமி லீக்கின் ஆட்சிக் காலத்தில், பிஎன்பி தானாக முன்வந்து இரண்டு தேர்தல்களைப் புறக்கணித்தது, மேலும் தீ வைப்பு மற்றும் வன்முறை மூலம் அவற்றை எதிர்க்கும் முயற்சிகளை அறிவித்தது, இதனால் பல உயிர்கள் இழப்பு ஏற்பட்டது. இதற்கு நேர்மாறாக, அவாமி லீக் தேர்தல்களைப் புறக்கணிக்கவில்லை; மாறாக, இந்த முறை சட்டவிரோதமாக தடை செய்யப்பட்டு உள்ளது. அவாமி லீக் வன்முறைக்கு அழைப்பு விடுக்கவில்லை. இந்த ஒருதலைப்பட்ச தேர்தலை அமைதியாகப் புறக்கணிக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டோம்.

இந்த சட்டவிரோத யூனுஸ் நிர்வாகத்தின் கீழ், மக்களின் வாக்குரிமையைப் பறிக்கப்பட்டு உள்ளது. வங்கதேச மக்களின் இன்றைய கோரிக்கை, முகமது யூனுஸின் ராஜினாமாவை உறுதி செய்வது; பொய்யான வழக்குகளை திரும்பப் பெறுவது மற்றும் அனைத்து அரசியல் கைதிகள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்களை விடுவிப்பது; அவாமி லீக் கட்சி மீது விதிக்கப்பட்ட தடையை நீக்குவது; மற்றும் நியாயமான தேர்தலை நடத்தி மக்களின் ஓட்டுரிமையை மீட்டெடுப்பது ஆகும். இவ்வாறு ஷேக் ஹசீனா கூறியுள்ளார்.

Advertisement