அதிகார பகிர்வு அவசியம்; திமுகவை மீண்டும் சீண்டிய காங் எம்பி மாணிக்கம் தாகூர்

28

நமது நிருபர்




வரும் சட்டசபை தேர்தலில் 170 தொகுதிகளில் திமுக போட்டியிடும். 160 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதை மேற்கோள் காட்டி, ''அதிகார பகிர்வு அவசியம். ஆட்சி பங்கு எங்கள் உரிமை'' என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார்.


தமிழகத்தில் ஆட்சியில் பங்கு , அதிகாரத்திலும் பங்கு என்று திமுகவை தொடர்ந்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் விமர்சித்து வருகிறார். அவர், ''கூட்டணி இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது , அதிகார பங்கீட்டுக்கான நேரம் இது'' என்றும் திட்டவட்டமாக கூறி வருகிறார்.


அவரின் இத்தகைய தொடர் பேச்சுகள், கருத்துகள் திமுக தலைமையை சீண்டுவதாக அமைந்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியை வெளிப்படையாக திமுக அமைச்சர்கள் உள்ளிட்டோர் வெளிப்படையாக விமர்சித்து வருகின்றனர்.


அந்த வகையில் மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திமுக அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசுகையில், ''கூட்டணி கட்சிகளை தி.மு.க., அவமதிப்பது கிடையாது. உள்ளதையே எடுத்துச் சொன்னோம். உதயசூரியன் என்றால் தான் மக்கள் ஓட்டளிப்பர். கூட்டணி வேண்டாம் என்று சொல்ல எங்களுக்கு உரிமை இல்லை.


ஆனால் முதல்வர் ஸ்டாலின், 'ஆட்சியில் பங்கு கிடையாது' என்று தெளிவாக சொல்லி விட்டார். வரும் சட்டசபை தேர்தலில் 170 தொகுதிகளில் திமுக போட்டியிடும். 160 தொகுதிகள் வரை வெற்றி பெறும்'' என கூறியிருந்தார்.

ஆட்சியில் பங்கு





இதனை மேற்கோள் காட்டி மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: 2021ல் 173ல் போட்டியிட்டு 133 வெற்றி. நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வி அடைந்த இடங்களை தான். அதிகார பகிர்வு அவசியம்.

ஆட்சி பங்கு எங்கள் உரிமை. மக்கள் தீர்மானிப்பார்கள். இவ்வாறு மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். ஆட்சியில் அதிகார பகிர்வு அவசியம் என்ற தனது நிலைப்பாட்டை மீண்டும் மாணிக்கம் தாகூர் தெளிவுப்படுத்தி உள்ளார்.

Advertisement