' ரூ.50,000 கொடுத்தாலும் தி.மு.க., ஆட்சி முடிவது உறுதி' அ.ம.மு.க., தினகரன் ஆருடம்

5

மதுரை: “த.வெ.க., தலைவர் விஜய் - நடிகை திரிஷா குறித்த தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்த்திருக்க வேண்டும்,” என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிவுறுத்தி உள்ளார்.

மதுரையில் நேற்று தினகரன் அளித்த பேட்டி:

தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், பொதுவாக பேசக்கூடியவர். அவர், விஜய் - திரிஷா குறித்து தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்த்திருக்கலாம். அதுதான் ஆரோக்கியமான அரசியலாக இருக்கும்.

மகளிர் உரிமைத்தொகையாக 50,000 ரூபாய் கொடுத்தாலும், தி.மு.க., ஆட்சி முடிவுக்கு வருவது உறுதி. ஓட்டுக்கு பணம் கொடுத்து மக்களை வாங்கிவிடலாம் என தி.மு.க., நினைக்கிறது; அது முடியாது.

ஆதிதிராவிட, பழங்குடியின மக்களின் நலத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 11,000 கோடி ரூபாய் நிதியை, தேர்தல் தோல்வி பயத்தில், மகளிருக்கு கொடுத்து தி.மு.க., அரசு மடை மாற்றம் செய்திருக்கிறது.

தி.மு.க., கூட்டணியில் காங்., இருக்குமா இல்லையா என்று புரியாத அளவிற்கு நிலவரம் உள்ளது. இரு கட்சிகளுக்கும் பனிப்போர் நடக்கிறது.

எங்கள் கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வரும். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வருவாரா என்பது அவரது முடிவு. 'ஜெயலலிதா ஆட்சி அமைய பாடுபடுவோம்' என சொல்பவர்கள், அதற்காக ஒன்றிணைந்து, உறுதுணையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்களை மக்கள் அடையாளம் கண்டு ஒதுக்கி விடுவர்.

ஆட்சியில் பங்கு வேண்டும் என நான் 'கண்டிஷன்' போடவில்லை. எங்களைச் சேர்ந்தவர்கள் அமைச்சராக வேண்டும் என்பது என் விருப்பம். தமிழகத்தில், இதுவரை கூட்டணி ஆட்சிக்கு மக்கள் வாய்ப்பு தந்ததில்லை. வரும் தேர்தலில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், தமிழகம் முழுதும் சுற்றி வருகிறார். சபரீசன் அல்ல, மாரீசனே வந்தாலும், எங்கள் தே.ஜ., கூட்டணியை ஒன்றும் செய்ய முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement