60 தொகுதிகள் லட்சியம்; 40 நிச்சயம்: பா.ஜ., ஆலோசனை கூட்டத்தில் முடிவு

13


சென்னை: தமிழகத்தில், பா.ஜ.,வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளின் விபரம், பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச் செயலர் பி.எல்.சந்தோஷ் முன்னிலையில், சென்னையில் நேற்று இறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், அ.தி.மு.க.,விடம், 60 தொகுதிகளை கேட்க, பா.ஜ., முடிவு செய்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு, இரு மாதங்களே இருக்கும் நிலையில், தமிழக பா.ஜ., தலைமை அலுவலகமான, சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில், அக்கட்சி தேசிய அமைப்பு பொதுச் செயலர் சந்தோஷ் தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.



இதில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், பா.ஜ.,வுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக தேர்வு செய்யப்பட்டுள்ள தொகுதிகள் தொடர்பாக இறுதிகட்ட ஆலோசனை நடந்தது. அதன் அடிப்படையில், அ.தி.மு.க.,விடம், 60 தொகுதிகளை கேட்டு, வரும் வாரத்தில் தொகுதி பங்கீட்டு பேச்சை துவக்க, பா.ஜ., முடிவு செய்துள்ளது.



பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: தமிழக பா.ஜ., போட்டியிட விரும்பும் தொகுதிகள் விபரம், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தெரிவிக்கப்பட்டது. அவரது ஆலோசனையின்படி, அந்த தொகுதிகள் சந்தோஷ் நடத்திய கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டன. அ.தி.மு.க.,விடம் 60 தொகுதிகளை கேட்டு பேச்சு நடத்தப்படும்.


எப்படியாவது 40 தொகுதிகளை பெற வேண்டும் என்பதில் சந்தோஷ் உறுதியாக உள்ளார். மேலும், தேர்தலை எதிர்கொள்ள செய்ய வேண்டிய களப்பணிகள், அண்ணாமலை, எச்.ராஜாவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கு, புதிய பொறுப்பாளர்களை நியமிப்பது உள்ளிட்டவை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement