கருத்து கேட்பு கூட்டத்தில் கனிமொழி ஆப்சென்ட்; திமுகவில் சலசலப்பு

2

பல்லடம்: பல்லடம் அருகே நடந்த கருத்து கேட்பு கூட்டத்துக்கு தி.மு.க. எம்.பி., கனிமொழி வராதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தல் அறிக்கை தயாரிக்க, தி.மு.க. சார்பில், எம்.பி. கனிமொழி தலைமையில், 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தொழில் துறையினர், பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடம், கோரிக்கை மனுவை பெற்று வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த காரணம்பேட்டையில், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கான கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது.

கனிமொழி தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கூட்டம் துவங்கும் சில நிமிடங்களுக்கு முன், கனிமொழி வரவில்லை என அறிவிக்கப்பட்டது. உடல் நலக்குறைவு காரணமாகவும், இதர பணிகள் இருப்பதாலும், அவர் வரவில்லை என, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கூறினார். கருத்து கேட்பு கூட்டத்தில் அமைச்சர்கள் முத்துசாமி, கயல்விழி, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



தி.மு.க.,வில் தென் மண்டல பொறுப்பாளராக எம்.பி., கனிமொழி செயல்பட்டு வரும் நிலையில், முதல்வரின் மருமகன் சபரீசன், நிர்வாகிகளிடம் நேரடியாக கருத்து கேட்டு வருவது, இருவருக்கும் இடையே பனிப்போரை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.


இதனால், ஏற்பட்ட மன உளைச்சல்தான், பல்லடத்தில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் கனிமொழி பங்கேற்கவில்லை என்றும் கட்சியினர் மத்தியில், பேச்சு அடிபட்டது. கடைசி நேரத்தில் கனிமொழி வராதது கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கோவையில் நேற்றுமாலை நடந்த கருத்து கேட்பு கூட்டத்திலும் கனிமொழி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement