விதிமீறும் வாகன ஓட்டுனர்கள் சுரங்கப்பாதையில் விபத்து அபாயம் 

கடலுார்: சுரங்கப்பாதையில் விதிமீறும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடலுார் லாரன்ஸ்ரோட்டில் ரயில்வே கேட் மூடும் போது, வாகனங்கள் நீண்ட துாரம் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனை தவிர்க்க சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. சுரங்கப்பாதையில் வாகனங்கள் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. அதிக சத்தத்துடன் ஹாரன் அடிப்பதால் ஓட்டுனர்கள், பொதுமக்கள் அச்சமடைகின்றனர்.

குறிப்பாக, சுரங்கப்பாதையில் வாகன ஓட்டுனர்கள் விதிமீறலில் ஈடுபடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

போலீசார், போக்கு வரத்து ஒழுங்குபடுத்தும்பணியில் இருக்கும் போது, ஓட்டுனர்கள், லாரன்ஸ் ரோட்டில் நாகம்மன் கோவில் முதல், சுப்ராயலு நகர் வரையிலான இணைப்பு சாலை பயன்படுத்துகின்றனர். ஆனால், போலீசார் கண்காணிப்பு பணியில் இல்லாத போது, வாகன ஓட்டுனர்கள் இணைப்பு சாலையை பயன் படுத்துவது கிடையாது .

இதற்கு பதிலாக சுரங்கப்பாதையில் சிறிது துாரம் சென்று மீண்டும் வலது பக்கமாக திரும்பி செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் எதிரெதிரே வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்குகிறது. போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டுனர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement