இஸ்ரேல் பெண் பலாத்கார வழக்கு : 3 பேருக்கு மரண தண்டனை

12


பெங்களூரு: கர்நாடகாவின் கொப்பாலுக்கு சுற்றுலா வந்த இஸ்ரேல் பெண் உட்பட இரு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், தடுக்க வந்த ஒருவரை ஆற்றில் தள்ளி கொன்ற வழக்கில் 3 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.



இஸ்ரேலை சேர்ந்த பெண், கடந்தாண்டு கொப்பாலுக்கு சுற்றுலா வந்திருந்தார். மார்ச், 6ம் தேதி, 'ஹோம் ஸ்டே'யில் தங்கியிருந்த அவரும், அமெரிக்காவை சேர்ந்த டேனியல், ஹோம் ஸ்டே உரிமையாளரான ஒரு பெண் மற்றும் மஹாராஷ்டிராவை சேர்ந்த பங்கஜ் ஆகிய நான்கு பேரும், துங்கபத்ரா கால்வாய் அருகே நடைபயிற்சி மேற்கொண்டனர்.


அப்போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மல்லேஸ், சாய், ஷரணப்பா ஆகிய மூன்று பேரும், வெளிநாட்டினரிடம் பணம் கேட்டனர். அவர்களும் முதலில், 20 ரூபாய் கொடுத்தனர். ஆனால், மூன்று வாலிபர்களும், தங்களுக்கு 100 ரூபாய் வேண்டும் என்று மிரட்டினர்.



அப்போது கைகலப்பு ஏற்பட்டது. அங்கு நடைபயிற்சி மேற்கொண்டிருந்த ஒடிசா மாநிலம் பூரியை சேர்ந்த பிபாஷ், கைகலப்பை தடுக்க முயற்சித்தார்.


இந்த தருணத்தில், டேனியல், பங்கஜ், பிபாஷ் ஆகிய மூவரையும், மல்லேஸ், சாய், ஷரணப்பா ஆகிய மூவரும் சேர்ந்து கால்வாயில் தள்ளிவிட்டனர். பின், இரு பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்தனர்.


கால்வாயில் விழுந்த டேனியலும், பங்கஜும் நீந்தி கரை சேர்ந்தனர். ஒடிசாவை சேர்ந்த பிபாஷ் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இரண்டு நாட்களுக்கு பின், அவரின் சடலம் கரை ஒதுங்கியது. வழக்கு பதிவு செய்த கங்காவதி ரூரல் போலீசார், மல்லேஸ், சாய், ஷரணப்பா ஆகிய மூவரையும் கைது செய்தனர். கங்காவதி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

நீண்ட விசாரணைக்கு பின், மூவர் மீதான குற்றமும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்களை குற்றவாளிகள் என அறிவித்த நீதிமன்றம், அவர்களுக்கான தண்டனையை, பிப். 16ம் தேதி அறிவிப்பதாக தெரிவித்துள்ளது. இதன்படி மல்லேஸ், சாய், ஷரணப்பா ஆகிய மூவருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

Advertisement