திருமணத்துக்கு முந்தைய உறவில் ஏமாற வேண்டாம்: கோர்ட் அறிவுரை

1

புதுடில்லி: திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட நபரின் ஜாமின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'திருமணத்திற்கு முன் ஆண், பெண் இருவரும் முற்றிலும் அந்நியர்கள்; நெருங்கி பழகும் முன் மிகுந்த எச்சரிக்கை தேவை' என அறிவுறுத்தியுள்ளது.


டில்லியை சேர்ந்த நபர் மீது, பெண் ஒருவர் திருமண மோசடி புகார் அளித்தார். திருமணம் செய்வதாக கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றஞ்சாட்டினார். இந்த புகாரின் அடிப்படையில், டில்லி நபர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமின் மனுவை டில்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

மிரட்டல்




இந்த வழக்கு நீதிபதிகள் நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப் போது பெண் மனுதாரர் சார்பில் கூறப்பட்டதாவது: கடந்த 2022ல், திருமண இணையதளம் மூலம் எனக்கு டில்லியை சேர்ந்த நபர் அறிமுகமானார். திருமணம் செய்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து டில்லி மற்றும் மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார்.


துபாய்க்கு அவர் வற்புறுத்தலின் பேரில் சென்றேன். அப்போது அந்தரங்க வீடியோக்கள் பதிவு செய்து மிரட்டினார். பின், 2024 ஜனவரியில் பஞ்சாபில் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவ்வாறு பெண் தரப்பில் கூறப்பட்டது.

எச்சரிக்கை





விசாரணையில் நீதிபதிகள் கூறியதாவது: இது இருதரப்பினரின் சம்மதத்துடன் நடந்த உறவு போல் தெரிகிறது. திருமணத்திற்கு முன் ஒருவர் மீது முழு நம்பிக்கை வைக்கக் கூடாது. நெருங்கி பழகும் முன் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


திருமணத்துக்கு முன் துபாய்க்கு சென்றிருக்கக் கூடாது. இருதரப்பினரின் சம்மதத்துடன் ஏற்பட்ட உறவை, பிரச்னைக்கு பின் குற்றவியல் வழக்காக மாற்றுவது சரியான அணுகுமுறை அல்ல. இரு தரப்பும் சமரசத்துக்கான வாய்ப்பை ஆராயுங்கள். குற்றஞ்சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்கும் வாய்ப்பையும் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறி, வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

Advertisement