குஜராத், தமிழகத்தில் பல நீதிமன்றங்களுக்கு இமெயிலில் வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் சோதனை

1

ஆமதாபாத்: குஜராத்தில் 6 நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அன்றாட நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன.

குஜராத்தில் உள்ள 40 பள்ளிகளில் குண்டு வெடிக்கும் என்று நேற்று மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இதையடுத்து,சம்பந்தப்பட்ட பள்ளிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

இன்று (பிப்.17) ஆமதாபாத், வதோதரா, வல்சாத், ராஜ்காட், காந்திநகர் மற்றும் மேஹசானா ஆகிய நீதிமன்றங்களில் வழக்கம் போல் பணிகள் தொடங்கின. அப்போது இந்த 6 நீதி மன்றங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக இ மெயிலில் மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்தவுடன் உள்ளூர் போலீசாரும், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் சம்பவ பகுதிக்கு சென்றனர்.

அங்கிருந்த வக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றி நீதிமன்ற வளாகங்களில் கடும் சோதனை நடத்தினர். ஆமதாபாத்தில் உள்ள பழைய நீதிமன்ற கட்டடத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

இதுகுறித்து வல்சாத் டிஎஸ்பி ஏ,கே வர்மா கூறியதாவது;

வெடிகுண்டு மிரட்டல் பற்றி மின்னஞ்சல் விவரத்தை அறிந்தவுடன் உடனடியாக போலீசார் அங்கு சென்றனர். அனைவரும் வெளியேற்றப்பட்டு, நீதிமன்றம் முழுவதும் பலத்த சோதனை நடத்தப்பட்டது. அதில் எந்த வெடிபொருட்களும் கைப்பற்றப்படவில்லை. மின்னஞ்சல் எங்கிருந்து, யார் அனுப்பியது என்பது குறித்து விசாரணை தொடங்கி உள்ளது.

இவ்வாறு ஏ.கே. வர்மா கூறினார்.

தமிழகத்தில் பாளையங்கோட்டையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. நீதிமன்ற அலுவலகத்திற்கு பெறப்பட்ட மின்னஞ்சலில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. தகவலறிந்த திருநெல்வேலி மாநகர வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் நீதிமன்ற வளாகம் முழுவதும் சோதனை நடத்தினர். இதேபோன்று, தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்திலும் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வர, சோதனையில் அனைத்தும் புரளி என்பது கண்டறியப்பட்டது.

தர்மபுரி, திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றங்களுக்கும் வெடிகுண்டு பிரட்டல் வந்தது. தென்காசி மாவட்ட கல்வி அலுவலகத்துக்கும் இன்று மிரட்டல் வந்தது. சோதனையில் அனைத்து மிரட்டல்களும் புரளி என தெரிய வந்தது.

Advertisement