புதுமை படைப்பதில் உலகுக்கு இந்தியாவே தலைமை: பிரான்ஸ் அதிபர் புகழாரம்

3


மும்பை: '' உலகுக்கு புதுமையை படைப்பதில் இந்தியா வெறும் பங்கேற்பாளர் மட்டுமில்லை; புதுமைகளை படைப்பதில் இந்தியாவே தலைமை வகிக்கிறது,'' என பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கூறியுள்ளார்.




மும்பையில் நடந்த இந்தியா - பிரான்ஸ் கூட்டமைப்பு நிகழ்ச்சியில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பேசியதாவது: ஆல்பாபெட் (கூகுள்) நிறுவன சிஇஓ இந்தியர்; மைக்ரோசாப்ட் சிஇஓ இந்தியர்; ஐபிஎம் நிறுவன சிஇஓ இந்தியர்; அடோப் சிஇஓ இந்தியர்; பாலோ ஆல்டோ நெட்வொர்ட் சிஇஓ இந்தியர்; சனேல் நிறுவன சிஇஓ இந்தியர்; உலகுக்கு புதுமையை படைப்பதில் இந்தியா வெறும் பங்கேற்பாளர் மட்டுமில்லை; புதுமைகளை படைப்பதில் இந்தியாவே தலைமை வகிக்கிறது.




இந்தியா புதுமைகளை உருவாக்குகிறதா என்பது இனிகேள்வி இல்லை. இந்தியா உடன் இணைந்து யார் புதுமைகளை உருவாக்குகிறார்கள் என்பதே கேள்வி. இதற்கு தெளிவான பதில் பிரான்ஸ் மட்டுமே. நாங்கள் இங்கு இருக்கிறோம். உங்களுடன் இருக்கவே விரும்புகிறோம். வெளியேற போவது இல்லை.




பாதுகாப்புத் துறையை பொறுத்தவரை மேக் இன் இந்தியா திட்டத்தில் பிரான்ஸ் உறுதியான கூட்டாளியாக உள்ளது. அடுத்த தலைமுறைக்கான இயந்திரங்கள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள், நீர் மூழ்கி கப்பல்கள் ஆகியவற்றை உருவாக்க நமது ஒத்துழைப்பு உதவுகிறது.
இரண்டு பெரிய நாடுகள் நிலத்திலும், கடலிலும், வானத்திலும் ஒன்றையொன்று தேர்ந்தெடுக்கின்றன. இயல்பாக அல்ல. ஆனால் உறுதியுடன். மேலும் விண்வெளித் துறையிலும் நமது ஒத்துழைப்பு முக்கியமானது. இவ்வாறு அவர் பேசினார்.




இம்மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா பிரான்ஸ் உறவில் இந்த ஆண்டு மிகவும் சிறப்பானது. மக்களுக்கு இடையிலான தொடர்புகள் வலுப்பெறும். தொழில்துறைக்கு இடையிலான ஒத்துழைப்பு விரிவடையும்.2026 ஜூனில், சுகாதாரம்,பருவநிலை மாற்றம் மற்றும் பாதுகாப்பு சார்ந்த உலகளாவிய சவால்களுக்கு தீர்வைவழங்கும் சிறந்த இந்திய ஸ்டார்ட் அப்களை உலகிற்கு காட்டுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement