தேர்தல் அறிவிப்புக்கு முன்பே பணம் வழங்கினால் அது எப்படி நடத்தை விதிமீறலாகும்? ஸ்டாலின் வழக்கில் சுப்ரீம் கோர்ட் கேள்வி

11

புதுடில்லி: தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே மக்களுக்கு பரிசு பொருட்களோ, பணமோ கொடுத்தால் அது எப்படி தேர்தல் விதிமுறை மீறலாகும்?' என, தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடர்புடைய வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், சென்னை, கொளத்துார் தொகுதியில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் பெற்ற வெற்றி செல்லும்' என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, அதிமுகவின் சைதை துரைசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் நடந்தது.

சைதை துரைசாமி சார்பில், வழக்கறிஞர் முன்வைத்த வாதங்கள்:

கொளத்துார் தொகுதியில் பணம் வினியோகிக்கப்பட்டது. அதேபோல, 'பூத் ஸ்லிப்'பில் சின்னம், பெயர் உள்ளிட்டவை அச்சடிக்கப்பட்டு கொடுக்கப்பட்டன. இது தொடர்பான ஆவணத்தை தாக்கல் செய்துள்ளோம். இதே ஆதாரத்தை தான் தேர்தல் அதிகாரியிடம் கொடுத்து, காவல் துறை மூலம் வழக்கு பதிவு செய்ய கோரினோம். ஆனால், அவர்கள் செய்யவில்லை.

அதே போல, தொகுதிகுட்பட்ட ஈஸ்வரி மருத்துவமனையில் பணப் பட்டுவாடா நடப்பது அறிந்து, அதிமுக பிரமுகர்கள், அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, மருத்துவமனையின் ஒரு அறை முழுதும் பூட்டப்பட்டிருந்தது. அறையை திறந்தபோது அங்கு பெண்கள் இருந்தனர்; அவர்களிடம் பணமும் இருந்தது.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'உங்களது குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் ஏற்று பதிவு செய்துள்ளதா? வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, குற்றம் சாட்டப்பட்ட நபர் பணப்பட்டுவாடா செய்ததாக கூறுகிறீர்கள். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன், மக்களுக்கு பரிசு பொருட்களோ அல்லது பணமோ கொடுத்தால் அது எப்படி விதி மீறலாகும்?' என, கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த சைதை துரைசாமி தரப்பு வழக்கறிஞர், தேர்தல் அறிவிப்புக்கு முன்பும், பின்பும் ஸ்டாலின் பணம் கொடுத்துள்ளார். அதை ஆதாரப்பூர்வமாக பதிவு செய்து கொடுத்துள்ளோம். 'சிடி' டிஜிட்டல் ஆதாரத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
மேலும், 'ஸ்டாலினின் மனைவி துர்கா ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில், 'ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகள் தொடர்பாக, கொளத்துார் தொகுதி மக்கள் தன்னை அணுகியதாகவும், அந்த வாக்குறுதிகளுக்காக சொந்த பணத்திலிருந்து பணம் கொடுத்ததாகவும் கூறி இருக்கிறார்' என்றும் வாதங்களை முன்வைத்தார்.
ஸ்டாலின் தரப்பு மூத்த வழக்கறிஞர், 'சைதை துரைசாமி சொல்லும் ஆதாரங்கள் எதுவும் சட்டப் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. அதனால் தான் சென்னை உயர் நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது. 45 நாட்கள் அவகாசம் வழங்கியும், சைதை துரைசாமி தரப்பு ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை. ஆனால், தற்போது உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் சொல்லக்கூடிய பெயர்கள் வழக்கிற்கு தொடர்பு இல்லாதவைு' என்றார்.
வழக்கின் வாத பிரதிவாதங்கள் நாளையும்(பிப்.18) தொடர்கின்றன.

Advertisement