அமெரிக்க விசா என்பது உரிமையல்ல; மார்கோ ரூபியோ

புடாபெஸ்ட்: “அமெரிக்க விசா என்பது எவருக்கும் வழங்க வேண்டிய கட்டாய உரிமை இல்லை; அது ஒரு அனுமதி மட்டுமே”, என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார்.


அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அரசு முறை பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார். இதன் முதல்கட்டமாக, ஹங்கேரி தலைநகரான புடாபெஸ்டில் நடந்த 'ஐரோப்பிய பாதுகாப்பு' கருத்தரங்கில் பங்கேற்ற அவர், அதன் பின் செய்தியாளர்களிடம் பேசினார்.


அப்போது அவர் கூறியதாவது:அமெரிக்கா விசா என்பது எவருக்கும் கட்டாயம் வழங்க வேண்டிய உரிமை இல்லை; அது ஒரு நாட்டிற்குள் நுழைய வழங்கப்படும் அனுமதி மட்டுமே.
ஒரு நபர் சுற்றுலா பயணியாகவோ, மாணவராகவோ அல்லது செய்தியாளராகவோ அமெரிக்காவுக்குள் நுழைந்துவிட்டு, அங்கு அமெரிக்காவின் தேசிய நலன்கள் அல்லது பாதுகாப்பிற்கு எதிராக செயல்பட்டால், அவரது விசா உடனடியாக ரத்து செய்யப்படும்.
விசா விண்ணப்பதாரர் இத்தகைய செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதாக குடியுரிமை அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தால், அவருக்கு விசாவே வழங்கப்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.


டொனால்டு டிரம்ப், அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவியேற்றது முதல், குடியுரிமை சட்டத்தை கடுமையாக்கி வருகிறார். இதன்படி, அமெரிக்காவின் பொது நலநிதியை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளதாக கருதப்படும் 75 நாடுகளுக்கு விசா வழங்குவதை கடந்த மாதம் தற்காலிகமாக அமெரிக்கா நிறுத்தியது. இதில் ரஷ்யா, ஈரான், சோமாலியா, கியூபா, வங்கதேசம் போன்ற நாடுகள் அடங்கும். மேலும், விசா விண்ணப்பதாரர்களின் நிதி நிலைமை, கல்வி, வேலைவாய்ப்பு திறன் மற்றும் ஆங்கில மொழி அறிவு உள்ளிட்டவை குறித்து மிக தீவிரமாக பரிசோதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement