ஈரான் மீது தாக்குதலுக்கு அமெரிக்கா திட்டம்; விமானப்படை தளம் பயன்படுத்த பிரிட்டன் அனுமதி மறுப்பு

லண்டன்: ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவுக்கு விமானப்படை தளத்தை கொடுக்க முடியாது என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஈரானை அச்சுறுத்துவதற்காக மத்திய கிழக்குப் பகுதிகளில் அமெரிக்க ராணுவத்தை குவித்து வருகிறது. போர் விமானங்கள், ஏவுகணை தாங்கிய கப்பல்களை ஈரானுக்கு எதிராக நிலைநிறுத்தியுள்ளது. இதற்கு சளைக்காத ஈரானும், அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், பதிலடி கொடுப்போம் என்று அறிவித்துள்ளது.

இதனிடையே, மத்திய கிழக்குப் பகுதியில் போர் நடப்பதை அரபு நாடுகள் விரும்பாததால், அமெரிக்கா - ஈரான் இடையே மறைமுக பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. அண்மையில் நடந்த பேச்சுவார்த்தையில், முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் கூறியிருந்தது.

அதேவேளையில், இன்னும் 10 முதல் 15 நாட்களுக்குள் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை எனில், மோசமான சூழ்நிலையை சந்திக்க நேரிடும் என்று ஈரானுக்கு அதிபர் டிரம்ப் மீண்டும் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், ஈரான் மீது துல்லியமான தாக்குதலை நடத்துவதற்கு ஏதுவாக, விமானப்படை தளங்களைப் பயன்படுத்த அனுமதி கேட்டு பிரிட்டனிடம் அமெரிக்கா கோரிக்கை வைத்திருந்தது. ஆனால், இதற்கு பிரிட்டன் மறுப்பு தெரிவித்து விட்டது. ஈரான் மீது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தாக்குதலை நடத்துவது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என்று கூறி, ஸ்விண்டன் அருகே உள்ள விமானப்படை தளத்தை அமெரிக்காவின் பயன்பாட்டுக்கு கொடுக்க பிரிட்டன் மறுத்துள்ளது.

மொரீஷியஸிடம் சாகோஸ் தீவுகளை மீண்டும் ஒப்படைக்கும் விவகாரத்தில் ஏற்கனவே மோதல் நிலவி வரும் நிலையில், பிரிட்டனின் இந்த முடிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Advertisement