ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியா அசுர வளர்ச்சி பெறும்; கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை நம்பிக்கை

1

புதுடில்லி: ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியா அசுர வளர்ச்சி பெறும் என்று கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பாக்ஸ் சிலிகா கூட்டமைப்பில் இந்திய இணைவதற்கான ஒப்பந்தம், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் அமெரிக்கப் பொருளாதார விவகாரங்கள் துறை அமைச்சர் ஜேக்கப் ஹெல்பெர்க் முன்னிலையில் கையெழுத்தானது.

இந்த நிகழ்ச்சியில் இந்தியா, அமெரிக்க பிரதிநிதிகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சையும் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியாவின் வளர்ச்சி அசாதாரணமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது; அதிக முன்னேற்றம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் நிறைந்த ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்று நான் ஏற்கனவே கூறியிருந்தேன். உலகின் அனைத்து மூலைகளிலும் இருக்கும் அனைத்து மக்களுக்கும் ஏஐ தொழில்நுட்பத்தின் பலன் கிடைப்பதை உறுதி செய்ய நாம் இணைந்து செயல்பட வேண்டும். இந்த விஷயத்தில் இந்தியா - அமெரிக்கா கூட்டணி முக்கிய பங்காற்றுகிறது. இரு நாடுகளுக்கும் தொடர்பு புள்ளியாக கூகுள் இருப்பது பெருமையளிக்கிறது.

ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி என்பது ஒரு அசாதாரணமானதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். தயாரிப்பு, உள்கட்டமைப்பு என அனைத்து விஷயங்களில் கூகுள் நிறுவனம் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement