ரயில் பயணியர் பாதுகாப்பு திட்டம் காகிதத்தில் மட்டுமே உள்ளது: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

- டில்லி சிறப்பு நிருபர் -


'ரயில் பயணியருக்கான பாதுகாப்பு திட்டங்கள், காகித அளவில் மட்டுமே உள்ளன' என, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.


ரயில் பயணியர் பாதுகாப்பை உறுதி செய்யவும், ரயில் நிலையங்களில் நிலவும் பிரச்னைகளை சரி செய்யவும் உத்தரவிடக்கோரிய மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசானுதீன் அமானுல்லா, மகாதேவன் அடங்கிய அமர்வில், கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.

அதிருப்தி



அப்போது, 'பயணியர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மத்திய பட்ஜெட்டில் போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை' என, நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
மேலும், இது தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் ரயில்வே துறைக்கு உத்தரவிட்டிருந்தனர்.


இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ரயில்வே நிர்வாகம் தாக்கல் செய்த அறிக்கையை பார்த்த நீதிபதிகள் கடும்
அதிருப்தி தெரிவித்தனர்.


அவர்கள் பிறப்பித்த உத்தரவு:என்ன திட்டங் களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கையில் தெளிவு இல்லை. நீதிமன்றத்தை குழப்பும் விதமாக அறிக்கை உள்ளது. நீதிமன்றத்தை முட்டாளாக்க கூடாது. மேலும், திட்டங்கள் காகித அளவில் மட்டுமே உள்ளன; செயலில் எதுவும் இல்லை. டில்லி, பாட்னா உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணியருக்கு போதிய பாதுகாப்பு இல்லை. நடைமேடைகளுக்கு செல்வது மிக சிரமமாக உள்ளது. பயணியர் பாதுகாப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தால் மட்டுமே ரயில்வே துறை வளரும்.

விசாரணை



சாதாரண பெட்டிகளில் பயணியர் நிலை இன்னும் மோசமாக உள்ளது. அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது முக்கியம். உங்களுக்கு இறுதி வாய்ப்பாக,
ஒரு மாதம் அவகாசம் தருகிறோம். அதற்குள், பயணியர் பாதுகாப்பு திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த திட்டங்
களுக்கு செலவிடப்படுகிறது என்பதை விரிவாக பிரமாண பத்திரத்தில் தெரிவிக்க வேண்டும். விரிவான பதில் இல்லாவிட்டால் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணைக்கு
உத்தரவிடப்படும்.


இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப்., 1ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Advertisement