துவங்கியது ஈரான்-அமெரிக்கா பேச்சு; சமரச தீர்வா-போரா: நீடிக்கும் பதற்றம்
ஜெனிவா: அமெரிக்கா - ஈரான் இடையே இரண்டாம் சுற்று அணுசக்தி ஒப்பந்த பேச்சு தொடங்கிய நிலையில் மேற்காசியாவில் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் தன் அணுசக்தி திட்டத்தின் கீழ், சர்வதேச விதிகளுக்கு அப்பாற்பட்டு, அதிகளவு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்திருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.
ஈரானால் சக்தி வாய்ந்த அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும் என்பதால், அதனை கட்டுப்படுத்தும் விதமாக அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.
ஆனால் இதற்கு ஈரான் சம்மதிக்காத நிலையில், மேற்காசிய நாடான இஸ்ரேலுடன் இணைந்து கடந்த ஆண்டு அதன் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
இந்த பதற்றத்தை தவிர்க்க அரபு நாடுகளின் வேண்டுகோள்படி, அமெரிக்காவும், ஈரானும்
பேச்சு நடத்த சம்மதித்தன.
மேற்காசிய நாடான ஓமனில் முதல்சுற்று பேச்சில் சமரசம் எட்டாத நிலையில், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இரண்டாம் சுற்று பேச்சு நேற்று தொடங்கியது.
இந்தமுறை ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ஈரானுக்கு அது மோசமான நாளாக மாறும் என்று டிரம்ப் ஏற்கனவே எச்சரித்திருந்தார்.
மேலும் ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகவும் கூறியிருந்தார். இந்த பேச்சுக்கு மத்தியில், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியும் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
''உலகின் வலிமையான ராணுவம் என்று அமெரிக்க அதிபர் கூறுகிறார். ஆனால், வலிமையான ராணுவம்கூட சில சமயங்களில் கடுமையான அடி வாங்கி எழ முடியாமல் தவிக்கும்,'' என்று அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே அமெரிக்கா மேற்காசிய பகுதியில் படைகளை குவித்து வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணைப்பில் ஈரான் சில தினங்களுக்கு முன் ராணுவ பயிற்சி நடத்தியது.
இதனால் பிராந்தியத்தில் பதற்றம் உச்சத்தை தொட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. எனவே பேச்சு வெற்றி பெறுமா அல்லது போர் தொடங்குமா என்ற பதற்றம் உலக அளவில் நிலவுகிறது.
மேலும்
-
ரூ.5 ஆயிரம் வழங்கிய திமுக அரசு; வீடு வீடாக பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
-
எத்தனை முறை தமிழகம் வந்தாலும் பிரதமரால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது; செல்வபெருந்தகை ஆரூடம்
-
மிரள வைத்த மயானக் கொள்ளை
-
அதிகாரத்தில் பகிர்வு கேட்பது தவறு கிடையாது; சொல்கிறார் திருமா
-
வீடு இல்லாதவர்களுக்கு தற்காலிக தங்குமிடங்கள்; சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு
-
ஹிந்து மத சடங்கு சம்பிரதாயங்கள் குறித்து கேலிப்பேச்சு; திமுக எம்பிக்கு வலுக்கும் கண்டனம்