அதிகாரத்தில் பகிர்வு கேட்பது தவறு கிடையாது; சொல்கிறார் திருமா

19

திருச்சி: ''எங்களுக்கு இந்த முறை அதிகாரத்தில் பகிர்வு கொடுங்கள் என்று கேட்கிறார்கள். அது ஒன்றும் தவறு கிடையாது'' என காங்கிரஸ் கோரிக்கை குறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: காங்கிரஸ் திமுக கூட்டணியில் தான் இருக்கும். அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் நேற்று செய்தியாளர்களை சந்திக்கும்போது காங்கிரஸ் திமுக கூட்டணியில் தான் உள்ளது. அதில் குழப்பம் இல்லை என்ற கருத்தை அழுத்தமாக கூறியிருக்கிறார்.



ஆகவே திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கிறது. கட்டுக்கோப்பாக இருந்தே தேர்தலை சந்திக்கும், நாங்கள் ஒரு கூட்டணியை உருவாக்குவதிலும் அந்த கூட்டணியை பாதுகாப்பதிலும் அக்கறையோடு இருக்கிறோம். ஆகவே அந்த கூட்டணி எந்த வகையிலும், பாதிப்படைந்து விட கூடாது என்ற பொறுப்புணர்வில் விடுதலை சிறுத்தை கட்சி இருக்கிறது.

ஆட்சி அதிகாரம்



இண்டி கூட்டணியில் இருந்து காங்கிரஸ் ஏன் வெளியே போக வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? தேர்தல் நேரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு இடையே சலசலப்பு ஏற்படும். இது எல்லா கூட்டணியிலும் ஏற்படும்.



திமுக கூட்டணியில் காங்கிரஸ் ஆட்சி அதிகாரம் கேட்கிறது. கொடுக்க முடியுமா? கொடுக்க முடியாதா என்பது குறித்து பேச்சுவார்த்தையில் தான் முடிவு செய்யப்படும்.
இப்படி கேட்பதால் ஒரு கூட்டணி உடைந்துவிடாது. கூட்டணி கட்சியில் இருப்பதால் உரிமையோடு கேட்கிறார்கள்.


உங்களுடைய வெற்றிக்காக நாங்களும் பாடுபடுகிறோம். இவ்வளவு காலமாக நாங்கள் உங்களுக்கு உழைத்திருக்கிறோம். அதனால் எங்களுக்கு இந்த முறை அதிகாரத்தில் பகிர்வு கொடுங்கள் என்று கேட்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது அது ஒன்றும் தவறு கிடையாது.

அழுத்தம்



தமிழக அரசியலுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு பொருந்தி வராது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். அடுத்த கட்டமாக அது பேச்சுவார்த்தையில் முடிவாகும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதால், ஒரு கூட்டணி உடைந்து விடாது. கட்டாயமாக திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் இருக்கும். இந்த கூட்டணியில் எந்த பாதிப்பும் ஏற்படாது. எங்களைப் போல் காங்கிரஸ் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. அதேபோல் காங்கிரஸ் சொல்வதைக் கேட்டு ஒன்றாக அழுத்தம் கொடுக்கும் நிலையில் நாங்க இல்லை.

ஒரு அணியில்




நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எங்களது கோரிக்கை என்னவென்றோ அதை பேச்சுவார்த்தையின் போதும் முன் வைப்போம். அதே நேரத்தில் இந்த கூட்டணியை உருவாக்குவதிலும், எங்களது பங்கு இருக்கிறது. அதை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் எங்களுக்கு இருக்கிறது.


எனவே இன்றைக்கு எவ்வளவு இடம் கூடுதலாக ஒரு அணியில் கிடைக்கும் என்று எதிர்பார்த்து, நாங்கள் வெளியேற வேண்டிய அவசியம் இல்லை. இந்த கூட்டணியில் தான் நீடிப்போம். இந்த கூட்டணியில் எங்களுக்கான கோரிக்கை, என்னவோ அதை உரிமையோடு கேட்போம். பிரச்னை இல்லாத கூட்டணி திமுக தலைமையிலான கூட்டணி தான். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Advertisement