இம்ரான் கானுக்கு சிகிச்சை: கபில் தேவ், கவாஸ்கர் கோரிக்கை

15

புதுடில்லி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் இம்ரான் கான் 73. கடந்த 1992ல் இவரது தலைமையான அணி உலக கோப்பை (50 ஓவர்) வென்றது. பின் அரசியலில் ஈடுபட்ட இம்ரான் கான், 2018-2022ல் பாகிஸ்தான் பிரதமராக இருந்தார்.


ஊழல் வழக்கில் சிக்கிய இவருக்கு, 2023ல் 14 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது ராவல்பிண்டி அடியலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில், 'இவருக்கு போதிய மருத்துவ வசதிகள் செய்து தரப்படவில்லை, வலது கண்ணில் 85 சதவீத பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது,' என செய்தி வெளியாகின.


இந்நிலையில், இந்தியாவின் கபில் தேவ், கவாஸ்கர், ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர், கிரெக் சாப்பல், இங்கிலாந்தின் நாசர் ஹுசைன், வெஸ்ட் இண்டீசின் கிளைவ் லாய்டு, நியூசிலாந்தின் ஜான் ரைட் உள்ளிட்ட 14 முன்னாள் கேப்டன்கள் சேர்ந்து, பாகிஸ்தான் அரசிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.



அதில்,'இம்ரான் கான் கடந்த இரண்டரை ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டிருப்பது கவலை தருகிறது. அவருடன் இணைந்து விளையாடிய கிரிக்கெட் வீரர்கள் என்ற அடிப்படையில் இம்ரான் கான், மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும் என விரும்புகிறோம். அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சையை தொடர்ந்து வழங்கப்படுவதை பாகிஸ்தான் அரசு உறுதி செய்ய வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement