நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தானவராக மாறிவிட்டார் ராகுல்: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

23


புதுடில்லி: நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ராகுல் உருவெடுத்துள்ளார் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ விமர்சித்துள்ளார்.

நேர்காணல் ஒன்றில் அவர் கூறியதாவது; காங்கிரஸ் எம்பி ராகுல் பொறுப்பில்லாமல் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார். எதிர்கட்சித் தலைவர் என்பவர் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர். பார்லிக்கு வெளியே மக்களை துரோகிகள் என்று சொல்கிறார். அவையில் போராட்டம் நடத்தி நாடகமாடுவது, வெளியிடப்படாத புத்தகத்தை படிக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பது என அனைத்துமே சிறுபிள்ளைத்தனமானது. இந்திய வரலாற்றிலேயே இப்படி ஒரு எதிர்கட்சித் தலைவரை பார்த்ததே இல்லை.

இந்த விவகாரத்தை ராகுலின் ஆதரவாளர்களே தீவிரமாக எடுத்துக் கொள்ளாதது ஏன் என்று சிந்தித்து பார்க்க வேண்டும். ராகுல் பொய்யான தகவலை கூறுகிறார். பிரதமர் யாரையாவது சந்தித்திருந்தால், அதற்கான ஆதாரங்கள் இருந்தால், அவற்றை சமர்ப்பிக்கட்டும். ஆதாரமே இல்லாமல் பிரதமரின் பெயரை வலுக்கட்டாயமாக இழுப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது.

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ராகுல் உருவெடுத்துள்ளார். ஏனெனில், இந்தியாவுக்கு எதிரான எண்ணம் கொண்டவர்களுடன் தொடர்பில் இருக்கிறார். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நக்சலைட்டுகள், குறிப்பிட்ட சித்தாந்தவாதிகளுடன் தொடர்பில் இருந்து வருகிறார்.

பார்லியை முடக்கும் விதமாக, காகிதங்களை வீசுவது, பதாகைகளை ஏந்தி இடையூறு செய்வது போன்ற காரியங்களை காங்கிரஸ் தான் பெரும்பாலும் செய்கிறது. சமாஜ்வாதி, திரிணமுல் காங்கிரஸ் மற்றும் திமுக எம்பிக்களுடன் எங்களால் இணக்கமாகச் செயல்பட முடிகிறது.

ஆனால், ராகுலின் அநாவசிய நடத்தையினால் சிறிய எதிர்க்கட்சிகளின் எம்பிக்களும் பேசும் நேரத்தை இழக்க வேண்டியுள்ளது. அவர்களால் தங்கள் தொகுதிப் பிரச்னைகளை கூட சொல்ல முடிவதில்லை. எதிர்க்கட்சியினர் சபாநாயகரின் அறைக்குள் நுழைந்து போராட்டம் நடத்திய விதம் மோசமானது.


சபாநாயகர் ஓம் பிர்லா மிகவும் பொறுமையோடு நடந்துகொண்டார். ஒருவேளை சோம்நாத் சாட்டர்ஜி சபாநாயகராக இருந்திருந்தால், அனைவரையும் சஸ்பெண்ட் செய்திருப்பார்.

ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியில் பேச்சிலும் செயலிலும் அனுபவமிக்க தலைவர்கள் இருந்தனர்.

ஆனால், தற்போது மெல்ல மெல்ல காங்கிரஸ் கட்சி ராகுலைப் போலவே மாறிவிட்டது. அவரைச் சுற்றி இருப்பவர்களும் அவரைப் போலவே மாறிவிட்டனர். தொடர்ச்சியாக மூன்று முறை தோற்ற பிறகும் அதே தலைவருடன் காங்கிரஸ் தொடர்ந்து செயல்படுகிறது. பாஜவில் இப்படி இருக்காது, இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement