தேசியம் போற்றும் தெய்வீக நாளேடு தினமலர்

ஆட்சியாளர்களின் கருணைப்பார்வைக்காக மக்களின் மேல் கருத்துக்களை திணிக்காமல், மக்களின் குரலாய் ஒலிப்பது என்பது பத்திரிகை தர்மம். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சுட்டிக்காட்டும் நேர்மையில் தினமலர் ஜொலிக்கிறது.



செல்வர்தங் கையில் சிறைப்பட மாட்டேன்;

பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன்!

தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;

தத்துவம் மட்டுமே அட்சயப் பாத்திரம்!

இவைசரியென்றால் இயம்புவதென் தொழில்

இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!

எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை

என்ப தறிந்து ஏகுமென் சாலை!



கவிஞர் கண்ணதாசனின் இந்த கவிதை வரிகள் அத்தனையும் தினமலருக்காகவே எழுதப்பட்டதோ என்று எண்ணும் அளவிற்கு, காலக்கணிதமாக, காலக்கண்ணாடியாக திகழ்வது தினமலர் என்றால் மிகையல்லை. ஆட்சியாளரோ, அதிகாரமிக்க மாட்சியாளரோ, யாராக இருந்தாலும், குறை என்று இருந்தால் நடுநிலையோடும் நேர்மையுடனும் துணிவோடும், அழுத்தங்களுக்கு அடிபணியாமல், விளம்பர வருமானத்திற்காக தன்மானம் இழக்காமல், மக்கள் மன்றத்தில் செய்திகளை வெளியிடுவதில் தினமலர் தீர்க்கமான மலர்தான்.



அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்

அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்

வெந்து தணிந்தது காடு

தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ
?



மகாகவி பாரதியின் இந்த வரிகளை மெய்ப்பிக்கும் வண்ணம், போற்றுதலுக்குரிய ராமசுப்பைய்யர் தொடங்கிய தீப்பொறி, அக்கினிஹோத்திரமாக ஆகிப்பெருகி, இன்று தமிழர்களை அரவணைத்துக் காக்கும் அரணாக திகழ்கிறது. இடிப்பாரே இல்லாத எமரா மன்னன் ஆவன செய்ய அறிவுறுத்தும் அரிதான ஆக்கப்பணியை அன்றாடம் செய்யும் அமைச்சகமாக திகழ்வதில் தினமலருக்கு நிகர் தினமலரே.

அரசியல் தலைவர்களின் பேட்டி மற்றும் அறிக்கைகளின் சுவையான பகுதிகளை, தனக்கே உரிய பாணியில் கலாய்க்கும் 'டவுட் தனபாலு'வின் நகைச்சுவையும், அரசியலிலலும் ஆட்சியிலும் எளிதில் தென்படாத விஷயங்களை பிரதிபலிக்கும் 'டீ கடை பென்ச்' செய்திகளும், என்னை மட்டுமின்றி அனைத்து வாசகர்களின் மனதையும் கொள்ளை கொண்டுள்ளன. அச்சுத்துறையின் எல்லா அம்சங்களையும் உள்ளடக்கி, தனித்துவ அழகிய தமிழ் நடையில், தினமலரின் 20 பக்கங்களில் பயணிக்கும்போது தமிழகத்தைச் சுற்றி வந்த, உணர்வைத் தவிர்க்கவே முடியாது.

சமூக ஊடகங்களின் வீச்சினில் பத்திரிக்கை செய்திகள் அத்தனையும் பழைய செய்திகளே என்று நினைக்கும் சமுதாய மாற்ற காலத்தில், தினமலர் தன் தனித்துவத்தால் தவிர்க்கமுடியாத சக்தியாக இருக்கிறது. அச்சகத்தில் மலர்ந்த தினமலர் இச்சகத்தில் இணையற்ற சக்தியாக திகழ்வதற்கு, அதன் நிர்வாகத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையே உள்ள பரஸ்பர நம்பிக்கை அடிப்படையிலான உறவு என நம்புகிறேன். அதனால் தான் தினமலரில் பணியாற்றிய அனைவருமே பத்திரிக்கை துறையின் பல்கலைகழகத்தில் பயின்றவர்களாக, ஆணிவேர்களாக உருவாக்கப்பட்டு இன்று பல அறிவார்ந்த மூத்த பத்திரிக்கையாளர்களாக, பல்வேறு ஊடகங்களில் வீரியம் கொண்ட விருட்சமாய் வளர்ந்து இருகிறார்கள்.

தேசியம் போற்றும் தெய்வீக நாளேடாக திகழும் தினமலர், தனது லட்சோப லட்சம் வாசககர்களின் குடும்பங்களோடு, பல நூற்றாண்டு காலம் கடக்க என் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.



தினமலரின் தீவிர வாசகன், ஸ்ரீகாந்த் கருணேஷ் தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர்











Advertisement