தமிழைக் காத்த தலைமகன் உ.வே.சா.,வுக்கு இன்று பிறந்தநாள்!

17

நமது நிருபர்





தள்ளாத வயதிலும், தமிழுக்காக உழைத்த டாக்டர் உ.வே.சாமிநாதையரின் 171வது நாளான இன்று (பிப்ரவரி 19), அவர் ஆற்றிய பணி குறித்து ஓர் சிறப்பு அலசல்.


உலகெங்கும் வாழும் தமிழர்களால் 'தமிழ்த் தாத்தா' என்று போற்றப்படுபவர் உ.வே.சாமிநாதையர். 1855ம் ஆண்டு பிப்ரவரி 19ல் தஞ்சாவூர் மாவட்டத்தின், சூரியமூலையில் வேங்கட சுப்பையர், சரசுவதி அம்மாள் தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்தார். இவர் 17 வயதில் நாகப்பட்டினம் மாவட்டம் திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் 5 ஆண்டு காலம் பயின்று தமிழறிஞர் ஆனார்.

உழைப்பு




சென்னை மாநில கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றிய இவர், புறநானூறு, நற்றிணை, குறுந்தொகையை பதிப்பித்தார். அவர் கண்டெடுக்காவிட்டால், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை மட்டுமல்ல, பழந்தமிழ் இலக்கியங்களே நம் பார்வைக்கு வராமல் போயிருக்கும். இந்த உழைப்புக்காகத் தான் அவர், தமிழ்த் தாத்தா என்று அனைவராலும் போற்றப்படுகிறார்.


உ.வே.சா., மீனாட்சி தமிழ்க் கல்லூரியில், 1924 முதல் 1927 வரை, முதல்வராக இருந்தார். 1942, ஏப்., 28ம் தேதி மறைந்தார். 'உ.வே.சா., பிறந்த நாளான பிப்ரவரி 19ம் தேதி, தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளான இன்று அவர் தமிழுக்கு ஆற்றிய அளப்பரிய பணியை நினைவு கூர்வோம். இவரது பெயரில் தமிழ் அறிஞர்களுக்கு தமிழ் வளா்ச்சித்துறை சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

நூல் வெளியீடு




தமிழுக்காக உ.வே.சாமிநாதையரின் பணி இன்று நிலைத்திருக்கிறது. நகைச்சுவையாக பேசும் திறமை உடையவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் உ.வே.சா. ஆற்றிய சொற்பொழிவே 'சங்ககாலத் தமிழும் பிற்காலத்தமிழும்' எனும் நூலாக வெளியிடப்பட்டது.


உத்தமதானபுரத்தில் உ.வே.சா. வாழ்ந்த இல்லம் தமிழக அரசால் நினைவு இல்லமாக மாற்றப்பட்டு உள்ளது. 1942ல் இவர் பெயரால் சென்னை பெசன்ட் நகரில் டாக்டர் உ.வே.சா. நூல் நிலையம் அமைக்கப்பட்டு இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.



@block_P@

தமிழ்மொழியின் காவலர்

இது குறித்து தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அழிந்து போகும் நிலையில் இருந்த மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளையும் எண்ணற்ற கையெழுத்து பிரதிகளையும் மீட்டு, நூல் வடிவில் வெளியிட்டு, பண்டைத் தமிழ் இலக்கியங்களை உயிர்ப்பித்த தமிழ்த் தாத்தா, உ.வே.சாமிநாதையர் பிறந்த தினம் இன்று.


தமிழின் தொன்மையையும், செழுமையையும், மரபையும் அடுத்த தலைமுறைக்கு பாதுகாத்து வழங்கிய அவரின் அர்ப்பணிப்பு ஒப்பற்றது. தமிழ் மொழியின் காவலரான மாமனிதர் உ.வே.சாமிநாதையரின் புகழைப் போற்றி வணங்குகிறோம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.block_P


கண்டதும் கேட்டதும்



உ.வே.சா பிறந்தநாளை முன்னிட்டு, ''கண்டதும் கேட்டதும்'' என்ற தலைப்பில் இலவசமாக இணையத்தில் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

புத்தகம் டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

Advertisement