விஜய் பேசியது என்னுடைய வசனம்; சீமான் ஆவேசம்

11


சென்னை: 'என்னுடைய வசனத்தை தவெக தலைவர் விஜய் பேசிக் கொண்டு இருக்கக் கூடாது. நீங்கள் இன்னும் களத்திற்கே வரவில்லை,' என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

காரணமே நான் தான்





சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; பீஹாரில் பாஜ - நிதிஷ்குமார் ரூ.10 ஆயிரம் கொடுத்தார்கள். அது விஜய் அரசியலுக்கு வந்ததால் தான் அறிவித்தார்களா? குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000, கல்லூரி மாணவர், மாணவிகளுக்கு ரூ.1,000 கொடுத்தது எல்லாம், தன்னுடைய வருகையால் திமுக கொடுப்பதாக விஜய் நினைத்துக் கொள்கிறார். அப்படியல்ல, அவர்கள் (திமுக) ஆட்சிமுறையை வளமையாக வைத்துக் கொள்கிறார்கள்.

நான் ஆட்சிக்கு வந்தால் இந்த முறையை ஒழிப்பேன். நீங்கள் (விஜய்) என்ன செய்வீர்கள். யாரும் சரியில்லை என்பது எளிது. எது சரி என்பதைப் பேச வேண்டும். தமிழக அரசு திட்டங்களுக்கு தூய தமிழில் பெயர்களை வைக்கக் காரணமே நான் தான்.


நம்பிக்கையில்ல





இன்று ரூ.10 லட்சம் கோடி கடன் என்றால், அடுத்து ஆட்சிக்கு வருபவர்கள் இன்னும் 5 லட்சம் கோடி கடனாகும். இதில், தரமான கல்வி உள்ளிட்ட நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்கள் என்ன என்பதை ஆட்சியாளர்களிடம் கேட்க வேண்டும்.

விஜய் ஒருமுறையாவது ஆட்சியமைத்து விட்டு, பின்னர் ஆட்சியில் பங்கு என்று சொன்னால், அவருடன் கூட்டணிக்கு செல்வார்கள். ஒரு முறை கூட ஆட்சியில் இல்லாத போது, ஆட்சியில் பங்கு என்று சொன்னால், யாருக்கு நம்பிக்கை வரும். விஜயகாந்த் தலைமையில் மக்கள் நலக் கூட்டணி அமைத்தார்கள் என்றால், அவர் 10 சதவீத ஓட்டுகளை வைத்திருந்தார். ஆட்சியில் பங்கு கொடுக்கும் அளவுக்கு தூய்மையான, நேர்மையான கட்சி எங்கு இருக்கு? நீங்கள் அரசியலுக்கு வரும் போதே, ஆட்சியில் பங்கு கொடுக்கறீங்க என்றால், எதுக்கு நீங்க (விஜய்) கட்சி ஆரம்பிச்சீங்க.

இந்தியாவையே ஆண்டு, நாட்டை நாசமாக்கிய காங்கிரசை சேர்த்துக் கொண்டு, ஆட்சியில் பங்கு கொடுத்தால், அந்த ஆட்சியின் தரம் எப்படி இருக்கும். ஆட்சியில் பங்கு என்ற தவெகவின் அறிவிப்பு நம்பிக்கைக்குரியதாக இல்லை. எனவே, யாரும் கூட்டணிக்கு செல்லவில்லை.

கொள்கை தான்





நான் ஆட்சியில் பங்கு தருவது அடுத்த விஷயம். முதலில் என்னை ஏற்க வேண்டும். ஊழல், லஞ்சத்தில் ஈடுபட்டால் நிரந்த பணிநீக்கம், ஜாதிக்காக கொலை செய்தால் உங்களின் சான்றிதழ்கள் செல்லாது, இலவசம் இல்லை என்று சொல்வேன். இதை எல்லாம் நீங்கள் ஏற்க வேண்டும்.

கால்நடைத்துறைக்கு என்று அமைச்சகம் இருக்கிறது, கால்நடை இருக்கிறதா? பால்வளத்துறைக்கு ஒரு அமைச்சகம் இருக்கிறதே, பால்வளம் இருக்கா? உங்களுக்கு பால் ஆந்திராவில் இருந்து வருகிறது, அப்புறம் எதுக்கு அந்த அமைச்சகம்? இப்படியொரு கேள்வி கேட்பவன் என்னுடன் இருந்தால், எனக்கு சரியாக இருக்கும். சும்மா கூட்டத்தை சேர்த்துக் கொண்டு நிற்பது இல்ல. இங்கு கொள்கை தான் அரசியல், கூட்டம் அரசியல் அல்ல.

தம்பி கூப்பிடக் கூடாது





எனக்கு விஜய் ஏன் கூட்டணிக்கு அழைப்பு விடுக்கணும். தம்பி எப்போது வந்தார். நான் 16 வருடமாக களத்தில் இருக்கிறேன். யார் பெரியவன். கோட்பாடு, வயதிலும் அவரை விட 8 வயது பெரியவன் நான் தான். அனுபவத்திலும் நான் தான் மூத்தவன். நான் கூப்பிட்டு தான் தம்பி( விஜய்) வர வேண்டும். தம்பி கூப்பிட்டு அண்ணன் போகக் கூடாது.


என்னுடைய வசனம்





"அதிமுகவை எம்ஜிஆர் துவங்கினார் இப்போது இபிஎஸ் வசம் உள்ளது, அண்ணாதுரை துவங்கிய திமுக ஸ்டாலினிடம் உள்ளது. எந்தவொரு பின்புலமும் இல்லாமல் வந்த என்னைப் போன்று தனித்து கட்சி ஆரம்பித்து ஒரு சதவிதம் ஓட்டு வாங்குவதற்கு திராணி இருக்கிறதா?" என்று சேலம் மாநாட்டில் விஜய் பேசியது என்னுடைய வசனம். அதை அவர் எடுத்து பேசுகிறார்.

அண்ணாதுரை ஆரம்பித்த கட்சியை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறார். எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியை ஊழல் கட்சி என்கிறார். உங்களுக்காவது (விஜய்) ஒரு ரசிகர் பலம் இருக்கிறது. ஆனால், நான் அப்படியில்லை, சாதாரண மகன் வந்து நின்று, 36 லட்சம் ஓட்டுகள் பெற்று தனி அங்கீகாரம் பெற்றுள்ளேன். என்னுடைய வசனத்தை நீங்கள் பேசிக் கொண்டு இருக்கக் கூடாது. நீங்கள் இன்னும் களத்திற்கே வரவில்லை.

எழுதி கொடுக்கறவன், ஏதோ எழுதி கொடுத்தான் என்று பேசி விட்டு போகக் கூடாது. இங்கு கேள்விகள் வரும். இது என்னுடைய வசனம், நீங்கள் தப்பா எடுத்து பேசுகிறீர்கள். பார்த்து பேச வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement