திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக: முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் பிரேமலதா

147

சென்னை: சென்னையில் திமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலினை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சந்தித்தார். வரும் சட்டசபை தேர்தலில் திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்தது. 10 ஆண்டுக்கு பிறகு விஜயகாந்தின் விருப்பம் நிறைவேறியுள்ளதாக நிருபர்களிடம் பிரேமலதா கூறினார்.

தமிழக சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அரசியல் கட்சியினர் ஒருபுறம் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர். மறுபக்கம் கூட்டணி கட்சிகளிடம் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையும் தொடங்கி உள்ளது.



இத்தகைய சூழ்நிலையில் கூட்டணி தொடர்பாக எந்த முடிவையும் அறிவிக்காமல், திமுக, அதிமுக, பாஜ உள்ளிட்ட வெவ்வேறு தரப்பினரிடம் தேமுதிக நிர்வாகிகள் பேச்சு நடத்தினர். எங்கு அதிகம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து பேரம் பேசி வருவதாக, அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் வெளிப்படையாக இது பற்றி தேமுதிகவை குறை கூறி வந்தனர்.


விஜயகாந்த் பெயரை பிரேமலதா கெடுப்பதாகவும், கட்சியை விலை பேசி வருவதாகவும் விமர்சனங்கள் இணையத்தில் வெளியாகி வந்தன. இந்நிலையில் இன்று சென்னையில் திமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலினை பிரேமலதா சந்தித்தார்.


சட்டசபை தேர்தல் கூட்டணியை இறுதி செய்யும் வகையில் இந்த சந்திப்பு அமைந்தது. எத்தனை தொகுதிகள் தேமுதிகவுக்கு கிடைக்கும்; ராஜ்யசபா சீட் கிடைக்குமா என்பது விரைவில் தெரியவரும்.


திமுகவுடன் கூட்டணி எதற்கு?



இது குறித்து நிருபர்களிடம் பிரேமலதா கூறியதாவது: யாருடன் கூட்டணி அமைக்க போகிறீர்கள் என்று பத்திரிகையாளர்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தீர்கள். அதற்கான விடை இன்று அறிவிக்கப்பட்டது.

இன்று முதல் தேமுதிகவும், திமுகவும் கூட்டணியை உறுதி செய்து இருக்கிறது. இந்த கூட்டணி தொண்டர்களின் விருப்பப்படி வைக்கப்பட்டு உள்ளது. திமுகவுடன் 2016ம் ஆண்டு அமைய வேண்டிய கூட்டணி. இப்போது அமைந்ததில் மகிழ்ச்சி. 10 ஆண்டுக்கு பிறகு விஜயகாந்தின் விருப்பம் நிறைவேறியுள்ளது.

எந்த தொகுதிகள், யார் வேட்பாளர்கள் என்பது எல்லாம் இதுக்கு பிறகு குழு அமைத்து முடிவு செய்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார். திமுகவுடன் முதல்முறையாக தேமுதிக கூட்டணி அமைத்து இருக்கிறது. இது ஒட்டுமொத்த தமிழக மக்களும், கட்சியினரும் மிக சந்தோஷமாக இந்த கூட்டணியை வரவேற்று இருக்கிறார்கள்.
இக்கூட்டணி 200க்கும் மேல் தொகுதிகளில் அமோக வெற்றி பெறும். இன்று கூட்டணி அமைக்கப்பட்டு இருக்கிறது. உங்களது சந்தேகம் எல்லாம் தீர்ந்துவிடும் என்று நினைக்கிறேன். இவ்வாறு பிரேமலதா கூறினார்.

Advertisement