கல்பனா சாவ்லாவுக்கு நேர்ந்ததைப் போல சுனிதா வில்லியம்ஸூக்கும்... நாசா வெளியிட்ட பகீர் தகவல்

2


வாஷிங்டன்: விண்கலம் விபத்தில் சிக்கி உயிரிழந்த விண்வெளி வீரர் கல்பனா சாவ்லாவைப் போன்று, சுனிதா வில்லியம்ஸ் சென்ற ஸ்டார்லைனர் விண்கலமும் விபத்தில் சிக்கியதாக நாசா பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த 2024ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் வெறும் 8 நாள் பயணமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். ஆனால், போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, 9 மாதங்களாக அவர்கள் அங்கேயே தங்கும் நிலை ஏற்பட்டது. அதன்பிறகு, கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் 9 விண்கலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு, இருவரும் பத்திரமாக திருப்பி அழைத்து வரப்பட்டனர்.


இந்த சூழலில், சுனிதா வில்லியம்ஸ் சென்ற விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு பற்றி நாசா எந்த விளக்கமும் அளிக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில், சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிப் பயணம் 'டைப் ஏ' விபத்து எனக் குறிப்பிட்டு, 311 பக்க அறிக்கையை நாசா நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் நேற்று (பிப்ரவரி 19)வெளியிட்டுள்ளார். 'டைப் ஏ' விபத்து என்பது ரூ.18 கோடிக்கும் அதிகமான இழப்பு அல்லது விண்கலத்தின் மீதான முழு கட்டுப்பாட்டை இழப்பதாகும்.

மேலும், போயிங் நிறுவனம் மற்றும் நாசா அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை அலட்சியப்படுத்தியதாகவும், திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்ற அழுத்தத்தினால் பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 2003ம் ஆண்டு இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 வீரர்கள், கொலம்பியா விண்கலம் வெடித்து சிதறியதால் உயிரிழந்தனர்.

Advertisement