குஜராத்தில் கார்-லாரி மோதி கோர விபத்து; ஒரே குடும்பத்தினர் 5 பேர் உள்பட 7 பேர் பலியான சோகம்

வல்சாத்: குஜராத்தில் காரும்,லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்பட 7 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு;

கப்ராடா மாவட்டத்தின் அம்பா ஜங்கல் கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் கார் ஒன்றில் சென்று கொண்டு இருந்தனர். கும்பாஹத் என்ற இடத்தில் வளைவில் திரும்பிய போது அதே சாலையில் எதிர்புறம் வந்து கொண்டிருந்த லாரியும், காரும் நேருக்கு நேர் மொதிக் கொண்டன.

இந்த விபத்தில் கார் சுக்குநூறாக நொறுங்கி போனது. அதில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியாகினர். இவர்கள் தவிர மேலும் 2 பேர் பலியாக, ஒட்டு மொத்த உயிரிழப்பு 7 ஆக உயர்ந்தது.

விபத்து குறித்து சம்பவ இடம் விரைந்து போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு போராடிய இருவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கு அதிவேகமே காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டாலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் கூறினர்.

நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர் நூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

Advertisement