பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக பதிவு; திருப்பூரில் 6 பேர் கைது

37

திருப்பூர்: பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக பதிவிட்ட வங்கதேசத்தவர் 6 பேரை இன்று (பிப்ரவரி 21) டில்லி போலீசார் கைது செய்தனர்.

டில்லி செங்கோட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தவகையில், சமூகவலைதளங்களில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக திருப்பூரில் வசித்து வரும் சிலர் கருத்துகள் பதிவிட்டதை டில்லி போலீசார் கண்டறிந்தனர். இந்த தகவல் அடிப்படையில் திருப்பூர் வந்த டில்லி போலீசார் பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தினர்.



அப்போது பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் திருப்பூர் ஊத்துக்குளி, பல்லடம், திருமுருகன்பூண்டி பகுதியில் பதுங்கியிருந்த வங்கதேச நாட்டவர் என்று தெரியவந்தது.
இதையடுத்து ஊத்துக்குளி பகுதியில் பதுங்கியிருந்த 2 பேர், பல்லடத்தில் 3 பேர், திருமுருகன்பூண்டியில் ஒருவர் என வங்கதேசத்தவர் 6 பேரை டில்லி போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் செங்கோட்டை குண்டு சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இவர்கள் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டது மட்டுமின்றி, உளவு பார்த்து பயங்கரவாதிகளுக்கு தகவல் தெரிவித்தும் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்கள் 6 பேரும் போலி ஆவணங்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களிடம் இருந்து 8 செல்போன்கள், 16 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Advertisement