'கூட்டணியில் தே.மு.தி.க., இணைப்பு யாருக்கும் 'செக்' வைக்க அல்ல'

புதுக்கோட்டை: ''தி.மு.க.,விற்கு த.வெ.க., ஒரு பொருட்டே அல்ல. மூன்றாவது இடத்தில் இருக்கும் ஆட்கள் குறித்து நாங்கள் பேச தயாராக இல்லை. தே.மு.தி.க., கூட்டணிக்குள் சேர்த்தது முதல்வரின் சாணக்கியத்தனம்,'' என கனிமவளத் துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.

அவர் நேற்று அளித்த பேட்டி:

தி.மு.க.,விற்கு த.வெ.க., ஒரு பொருட்டே அல்ல. மூன்றாவது இடத்தில் இருக்கும் ஆட்கள் குறித்து பேசி பயனில்லை. தே.மு.தி.க.,வை கூட்டணிக்குள் கொண்டு வந்தது, முதல்வர் ஸ்டாலினின் சாணக்கியத்தனம்.

இந்திய அரசியலில் சிறப்பான நகர்வுகளை முதல்வர் ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறார். இதன் வாயிலாக தி.மு.க., கூட்டணி, தமிழகத்தில் 200 இடங்களுக்கும் கூடுதலாக வெற்றி பெறும்.

கருத்துக்கணிப்புகளை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை; உழைப்பை தான் நம்புகிறோம்.

ஆட்சி பொறுப்பில் இருந்து நிறைய கஷ்டங்களை அனுபவித்து, மக்களுக்கு நன்மை செய்திருக்கிறோம். அதனால், தி.மு.க.,வுக்குத் தான் மக்கள் ஓட்டளிப்பர் என்ற நம்பிக்கை உள்ளது.

தி.மு.க.,வுடன் தே.மு.தி.க., கூட்டணி வைத்ததால், 'விஜயகாந்த் ஆன்மா மன்னிக்காது' என பா.ஜ., கூறுகிறது. அவர்களுக்கு அந்த தகுதி கிடையாது.

இது போன்ற எந்த கருத்துகளையும் சொல்வதற்கு, விஜயகாந்தின் வாரிசுகளுக்கு மட்டுமே உள்ளது. விஜயகாந்தின் ஆன்மா, தி.மு.க., கூட்டணியை வாழ்த்தும்.

யாருக்கோ செக் வைப்பதற்காக, தே.மு.தி.க.,வை தி.மு.க., கூட்டணியில் சேர்த்திருப்பதாக சொல்கின்றனர்; அது தவறு.

கூட்டணியை வளப்படுத்தவே, தே.மு.தி.க.,வை கூட்டணியில் இணைத்திருக்கிறோம். தோழமைக்கு முக்கியத்துவமும் மரியாதையும் தரும் ஒரே தலைவர் முதல்வர் ஸ்டாலின் மட்டுமே.

இவ்வாறு ரகுபதி கூறினார்.

Advertisement